கோவை ஜெயம் நிறுவனத்துடன் தொழிற்கூட்டணி சேர்ந்த டாடா மோட்டார்ஸ்
கோவையைச் சேர்ந்த ஜெயம் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் புதிய ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டு ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கோவையைச் சேர்ந்த பிரபல 'ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ்' நிறுவனத்துடன் தொழிற்கூட்டு ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. அதிக செயல்திறன்மிக்க கார்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்ய இந்த இரண்டு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்தை முன்னாள் ஃபார்முலா-3 சாம்பியனான ஆனந்த் தலைமையேற்று நடத்தி வருகிறார். இவர் 1980 -90 ஆண்டுகளின் காலகட்டத்தில் சிறந்த கார் பந்தய வீரராக திகழ்ந்தவர். இந்தியாவின் தலை சிறந்த இஞ்சின் வடிவமைப்பாளரான கோவை ஜெயச்சந்திரனின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பந்தய கார்களை வடிவமைத்து உருவாக்கித்தரும் நிறுவனத்தை தொடங்கினார் ஆனந்த். நல்ல வளர்ச்சி கண்ட இவரின் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சிறப்பு செயல்திறன்மிக்க வாகனங்களை உருவாக்குவதற்காக இந்நிறுவனங்கள் இணைந்து "JT Special Vehicles Pvt. Ltd" என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளன. இது 50:50 என்ற கூட்டு பங்களிப்பு கொண்ட நிறுவனமாகும். இதில் ‘J' ஜெயம் என்பதனையும் ‘T' டாடா என்பதனையும் குறிப்பதாகும்.

இந்த நிறுவனத்தின் வாயிலாக மேம்பட்ட செயல்திறன் மற்றும் தோற்றம் கொண்ட புதிய கார்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இருநிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

புதிதாக ஏற்பட்டுள்ள இந்தக்கூட்டணி தொடர்பாக டாடாமோட்டார்ஸின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ஜெண்டர் பட்ஷெக் கூறுகையில், ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் உள்ள ஜெயம் நிறுவனத்துடன் நீண்ட கால அடிப்படையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது மகிழ்வளிக்கின்றது என்றும் இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு செயல்திறன்மிக்க வாகனங்கள் கிடைக்கப்பெறும் என்று கூறினார்.

நீண்ட காலமாகவே டாடா நிறுவனத்திற்கும் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்திற்கு பந்தம் இருந்து வரும் நிலையில், தற்போது புதிதாக கூட்டணி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டிற்கு புதிய கவுரவத்தை கொடுத்துள்ளது.

ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பில் உருவான ‘போல்ட் ஸ்போர்ட்' ஹேட்ச்பேக் கார் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது நினைவுகூறத்தக்கதாகும்.

மேலும் கூட்டணி தொடர்பாக ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் கூறுகையில், "நீண்டகாலமாகவே டாடா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், எங்கள் நிறுவனம் டாடா நிறுவனத்தின் ஒரு கரமாகவே செயல்பட்டு வந்துள்ளது. இனி அதிக செயல்திறன் கொண்ட கார்களை ஜெயம் மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்" என குறிப்பிட்டார்.

ஆரம்பகாலங்களில் மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ், கடந்த 2005 முதல் டாடா நிறுவனத்துடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான டாடா இண்டிகாவின் கான்செப்டை 2006ல் ஜெயம் நிறுவனமே தயாரித்து அளித்தது குறிப்பிடத்தக்கது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், ஜேஏ மோட்டார் ஸ்போர்ட் என்ற கார் பந்தய அணி ஒன்றையும் நிர்வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








