இந்தியாவின் டாப் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி: விரைவில் உருவாகும் புதிய வாகனப் புரட்சி..!!
இந்தியாவின் வாகன புரட்சி மலர கூட்டணி அமைத்த இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
2030ம் ஆண்டிற்குள் வாகனங்களுக்கு மின்சாரத்தை ஆற்றலாக மாற்றும் மத்திய அரசின் முடிவிற்கு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியாவில் வாகன தயாரிப்பில் முன்னோடியாக இருக்கக்கூடிய மூன்று நிறுவனங்கள் மின்சார பேருந்துகளை உருவாக்க கூட்டணி அமைத்துள்ளன.

டாடா மோட்டார்ஸ், அசோக் லெய்லேண்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா என வாகன உற்பத்தியின் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் இணைந்து மின்சார பேருந்துகளை தயாரித்து இந்தியாவிற்கு வழங்கவுள்ளன.

கனரக மற்றும் கமர்ஷியல் வாகன தயாரிப்புகளில் இந்த மூன்று நிறுவனங்களுக்கு இடையில் மிகப்பெரிய போட்டி உள்ளது.
ஆனால் மின்சார ஆற்றல் கொண்ட வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்த ஒரு ஒழுங்குமுறை தேவைப்படுகிறது.

அதை கருதியே டாடா மோட்டார்ஸ், அசோக் லெய்லேண்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

மனிகன்ட்ரோல் என்ற இணையதளத்திறாக பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் மேத்யூ "கார் தயாரிப்புகளுக்காக இம்மூன்று நிறுவனங்களும் இணைந்து நிறுவிய கார்-கூட்டமைப்பு தற்போது மின் பேருந்து கூட்டமைப்பாக பெயர் மாற்றம் பெறுகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய அரசும் இந்த கூட்டணியில் பங்குதாரராக இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார வாகன உற்பத்தியை சந்தைப்படுத்திட, அதற்கான உற்பத்தி பணிகளில் 50% பண தேவையை இந்திய அரசும் இதில் முதலீடு செய்கிறது.

மின்சார பேருந்து உற்பத்தியில் வேறு எந்த வெளிநாட்டு நிறுவனங்களையும் இணைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லை. அதனால் தயாரிப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படாது என இந்த கூட்டணி தெரிவிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, டாடா நிறுவனம் ஏற்கனவே ஒரு மின்சார பேருந்து மாடலை உருவாக்கி விட்டது.அதை, ஹிமாச்சல் பிரதேசத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர டாடா அம்மாநில போக்குவரத்து அமைச்சகத்தோடு பேச்சு வார்த்தையில் உள்ளது.

இவை தவிர அசோக் லெய்லேண்ட் நிறுவனம் மின்சார பேருந்துகளை சர்கியூட் என்ற பெயரில் தயாரிக்க உள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் மின்சார பேருந்துகள், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120கி.மீ தூரம் வரை பயணம் செய்யும் திறனோடு இருக்கும்.

டாடா மோட்டார்ஸ், அசோக் லெய்லேண்ட் நிறுவனங்களை போல மஹிந்திரா நிறுவனமும் ஒரு மின்சார பேருந்து மாடலை தயாரித்துள்ளது.
32 இருக்கைகள் கொண்ட மஹிந்திராவின் மின்சார பேருந்து 2019ல் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார பேருந்துகளை தனித்தனியே இந்தியாவில் கொண்டுவர அதிக பணம் செலவாகும். அதை தடுக்கவே டாடா மோட்டார்ஸ், அசோக் லெய்லேண்ட் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளன.

டாடா வெளியிட்டுள்ள கணக்குப்படி 9 மீட்டர் நீளம் கொண்ட மின்சார பேருந்தை தயாரிக்க ரூ.1.6 கோடி செலவாகும்.
அதேபோல 12 மீட்டர் நீளம் கொண்ட மின்சார பேருந்திற்கு ரூ.2 கோடி வரை செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








