டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்- முழு விபரம்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த மாதம் டமோ என்ற புதிய கார் பிராண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதிசக்திவாய்ந்த கார் மாடல்களை இந்த பிராண்டில் வெளியிட இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், டமோ பிராண்டின் முதல் ஸ்போர்ட்ஸ் காரின் மாதிரி மாடலை ஜெனிவாவில் துவங்கி இருக்கும் மோட்டார் கண்காட்சியில் சற்று நேரத்திற்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

டமோ பிராண்டில் வெளியிடப்பட்டு இருக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் டமோ ரேஸ்மோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டமோ ரேஸ்மோ சாதாரண சாலைகளுக்கான காராகவும், டாடா ரேஸ்மோ ப்ளஸ் மாடல் கார் பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான ஏற்ப கூடுதல் சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கின்றன.

டமோ ரேஸ்மோ கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடையதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டதாக இருக்கிறது. டமோ ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் 3,835மிமீ நீளமுடையது.

டமோ ரேஸ்மோ கார் பின்பக்க எஞ்சின் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 186 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டாடா ரேஸ்மோ கார் 0- 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த கார் மிக இலகுவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட கலவையிலான கலப்பு பாகங்கள் மூலமாக எடை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

இந்த காரை இத்தாலியை சேர்ந்த பிரபல டிசைனர் மர்செல்லோ கந்தினியின் ஒத்துழைப்புடன் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி உள்ளது. அதேநேரத்தில், இந்த காரை முழுக்க முழுக்க சொந்த முயற்சியில் டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது.

மொத்தம் 250 டமோ ரேஸ்மோ கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கார் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. ரூ.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2000வது ஆண்டில் ஜெனிவா மோட்டார் ஷோவில் ஆரியா ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. 2001ம் ஆண்டில் ஆரிய கூபே கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ஆனால், அவை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆரியா பெயரை தனது எம்பிவி காருக்கு பயன்படுத்தியது. இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து தற்போது புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்த புதிய கார் விரைவில் தயாரிப்பு நிலையை எட்டும் என்று டாடா மோட்டார்ஸ் உறுதி தெரிவிக்கிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








