மின்சார ஆற்றலில் இயங்கும் டியாகோ மாடல் காரை வெளியிட்டது டாடா..!!
மின்சார ஆற்றலில் இயங்கும் டியாகோ மாடல் காரை வெளியிட்டது டாடா..!!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில் டாடா நிறுவனம் தனது புதிய டியாகோ மின்சார காரை வெளியிட்டது.

இங்கிலாந்தின் மில்ப்ரூக் நகரில் கார்பன் உமிழ்வை குறைக்கும் விதத்தில் தயாரான வாகனங்களுக்கான எல்.சி.வி 2017 என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் டாடாவின் சமீபத்திய அறிமுகமான டியாகோ கார், மின்சார பயன்பாட்டில் இயங்கும் மாடலில் தயாராகியுள்ளது.

டியாகோ இ.வி என்று டாடா பெயரிட்டு இருக்கும் இந்த கார் தற்போது இந்த கண்காட்சியில் அறிமுகமாகியுள்ளது.

டாடாவின் இங்கிலாந்து கிளையான ஐரோப்பிய தொழில்நுட்ப மையம் (TMETC) டியாகோவை முற்றிலும் மின்சார ஆற்றலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து உருவாக்கியுள்ளது.

லிக்குவிட்-கூல்டு 85 கிலோ வாட் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் திறனை பெற்ற டியாகோ இ.வி மாடல் கார் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும் திறன் கொண்டது.

மேலும் துவக்க நிலையில் இருந்து இந்த கார் 100 கி.மீ வேகத்தை வெறும் 11 விநாடிகளில் எட்டும். எஞ்சின் தேவை இல்லை என்பதால் டியாகோ இ.வி கார் மேலும் எடை குறைந்துள்ளது.

அதிகப்பட்சம் 135 கி.மீ வேகத்தை பெற்றிருக்கும் இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை செல்லும் என டாடா தெரிவிக்கிறது.

கம்பஷன் எஞ்சின் அம்சம் பெற்ற டியாகோ மாடல் இந்தியாவில் அறிமுகமான பிற்பாடு சுமார் 7000 அளவிலான டியாகோகார்களை இந்தியாவில் மட்டும் டாடா நிறுவனம் விற்றுள்ளது.

லோ-காஸ்ட் பிளாட்ஃபாரமின் கீழ் தயாரான டியாகா காரின் வெற்றி டாடாவிற்கு மிகவும் ஆச்சர்யம் அளிப்பவை தான்.

அதற்கு எந்தவகையிலும் குறைந்த மதிப்பீட்டை கொண்டு இருக்காத வகையில் டியாகோ இ.வி காரை டாடா வெளியிடுகிறது.

மின்சார ஆற்றலுக்கு வேண்டி, புதியதாக ஒரு காரை உருவாக்காமல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கார் மாடலை மின்சார ஆற்றலுக்கு மாற்றி இருப்பது தான் டாடாவின் புத்திசாலித்தனம்.

ஏற்கனவே இந்தியாவில் டாடா டியாகோ வெற்றிப்பெற்ற மாடலாக வலம் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு டியாகோ இ.வி அறிமுகமாகும் நாடுகளிலும் அங்குள்ள வாடிக்கையாளர்கள் இதற்கு வரவேற்பு அளிக்கலாம்.


Click it and Unblock the Notifications