ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆலையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் எஞ்சின்கள் திருட்டு!
இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் எஞ்சின்கள் திருடு போனது.
இங்கிலாந்தில் அமைந்துள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு ஆலையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய புதிய கார் எஞ்சின்கள் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆலை, இங்கிலாந்து நாட்டிலுள்ள சோலிஹல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், புதிய கார்களின் அசெம்பிள் பணிக்காக இந்த ஆலையில் எப்போதுமே, நூற்றுக்கணக்கான எஞ்சின்கள் இருக்கும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான கார் எஞ்சின்களை மர்ம நபர்கள் துணிச்சலாக திருடிச் சென்றுவிட்டனர்.

கடந்த மாதம் 31ந் தேதி இரவு 10.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆலை வளாகத்திற்குள் ட்ரெயிலர் லாரியுடன் நுழைந்த திருடர்கள் கார் எஞ்சின்களை துணிச்சலாக திருடிச் சென்றுவிட்டனர். அதுவும், இரண்டு முறை வந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் போலீசாரிடம் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். திருடு போன எஞ்சின்களின் மதிப்பு ரூ.25 கோடி என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், எவ்வளவு கார் எஞ்சின்கள் திருடு போயின என்பது குறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை.

இந்த திருட்டு சம்பவத்தால் கார் உற்பத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. திருடு போன கார் எஞ்சின்களை மீட்டுத் தருவதற்கு துப்பு கொடுப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பான பாதுகாப்பு கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆலைக்குள் இரண்டு முறை பெரிய ட்ரெயிலர் லாரியை வைத்து கார் எஞ்சின்களை திருடர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!
புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








