மாருதி சுசுகி-க்கு பிறகு இந்தியாவில் ஜிஎஸ்டி கார் விற்பனை குறித்து அதிரடி முடிவை வெளியிட்ட டொயோட்டா!
மாருதி சுசுகி-க்கு பிறகு இந்தியாவில் ஜிஎஸ்டி கார் விற்பனை குறித்து அதிரடி முடிவை வெளியிட்ட டொயோட்டா..!!
டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜிஎஸ்டி-யின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், ஹைஃபிரிட் கார்களை விற்பதற்கான சந்தையை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ், இந்தியாவில் ஹைஃபிரிட் கார்களுக்கான வரி 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனால் ஹைஃபிரிட் கார்களை இந்தியாவில் விற்க முனைந்திருந்த பல்வேறு கார் நிறுவனங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

மத்திய அரசும் இந்த வரி விகிதத்தில் மாற்றம் செய்யாது என்று முடிவாகிவிட்டதால், சில கார் நிறுவனங்கள் இந்தியாவில் ஹைஃபிரிட் கார் விற்பனையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.

சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மைல்ட் ஹைஃபிரிட் பெற்ற தனது சியாஸ் மற்றும் எர்டிகா மாடல் கார்களுக்கான விற்பனை திறனை ஜிஎஸ்டி-க்கு பிறகு மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

தற்போது இதே முடிவைத்தான் பிரபல ஜப்பான் நிறுவனமான டெயோட்டா கிர்லோஸ்கார் மோட்டாரும் வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி-க்கு பிறகு ஹைஃபிரிட் கார்களுக்கான 43 சதவீத வரியால், அந்நிறுவனத்தின் கேம்ரி செடான் மாடல் கார் சுமார் பழைய விலையில் இருந்து கூடுதலாக ரூ.3 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

பெங்களூரில் உள்ள டொயோட்டாவிற்கான தொழிற்சாலையில் தயாராகி வரும் கேம்ரி ஹைஃபிரிட் கார், ஜிஎஸ்டி-க்கு முன்னர் ரூ.32 லட்சம் விலை மதிப்பில் இருந்தது.

ஜிஎஸ்டி-க்கு பிறகு 28 சதவீத வரியுடன், செஸ் வரியும் 15 சதவீதம் இணைந்து, தற்போது டொயோட்டா கேம்ரி கார் 43 சதவீத வரியின் கீழ் ரூ. 35 லட்சத்திற்கு விற்பனை ஆகிறது.

ஜிஎஸ்டி-க்கான வழிமுறைகளை ஏற்று, டொயோட்டாவும் ஹைஃபிரிட் கேம்ரிக்கான விலையை உயர்த்தியுள்ளது. இதனால் இந்த காரின் தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதற்கு பதிலளித்துள்ள டொயோட்டா இந்தியாவின் துணைத் தலைவரும் மற்றும் இயக்குநருமான என். ராஜா,
"ஹைஃபிரிட் கார்கள் தயாரிப்பை டொயோட்டா நிறுத்தாது. சுற்றுச்சூழலை பாதிக்காத ஹைஃபிரிட் கார்களுக்கான தயாரிப்பு பணிகளை டொயோட்டா தொடரும்" என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டியால் ஹைஃபிரிட் கார் விற்பனையில் டொயோட்டா சில பின்னடைவுகளை சந்தித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஹைஃபிரிட் கார் விற்பனை இருக்கும் என்றும் என். ராஜா தெரிவித்தார்.

ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தில் டொயோட்டா விற்பனை செய்து வரும் மற்றொரு கார் பிரையர்ஸ். இருந்தாலும் கேம்ரி மாடல் கார்களை தான் இந்தியாவில் 90 சதவீத வாடிக்கையாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜிஎஸ்டி-யால் விலை அதிகரித்திருக்கும் காரணத்தினால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் கார்களை டெலிவெரி பெறுவதை குறித்து ஆராய்ந்து வருவதாக டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வரை ஸ்டாக்கில் இருந்த அனைத்து ரக கார்களில் சுமார் 2000 யூனிட்டுகளை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. இனி வரும் காலங்களில் 12,000 கார்களை டெலிவெரி செய்வதற்கு முன்பதிவு பெற்றுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து வரும் காலங்களில் கார் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்பது டொயோட்டாவின் எண்ணமாக உள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் டொயோட்டா காருக்கான விற்பனை திறனும் பழைய நாட்கள் போல தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








