கையடக்க கருவி மூலம் பெட்ரோல் நிலையங்களில் பெரும் மோசடி... உஷார் மக்களே!!
கையடக்க கருவி மூலமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவில் பெரும் மோசடி செய்து வருவது அம்பலமாகி உள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவில் மோசடி நடப்பது புதிய செய்தி அல்ல. ஆனால், தற்போது கையடக்க கருவி மூலமாக வாடிக்கையாளர்களிடம் எளிதாக எரிபொருளை ஆட்டையை போட்ட சம்பவம் உத்தரபிரதேச போலீசார் நடத்திய அதிரடி சோதனை மூலமாக வெளியுலகுக்கு அம்பலமாகி உள்ளது.

ஆம், உத்தரபிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவில் பெரிய அளவில் மோசடி நடப்பதை ஆஜ்தக் என்ற தொலைக்காட்சி தனது ரகசிய ஆய்வு மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அத்துடன், சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவலும் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அம்மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அம்மாநில தலைநகரில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் அதிரடி சோதனை இன்று நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேச தலைநகர் லக்ணோவில் உள்ள 12 பெட்ரோல் நிலையங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, 7 பெட்ரோல் நிலையங்களில் சிப் என்று சொல்லக்கூடிய கையடக்க அளவிலான மின்னணு கருவி ஒன்றை பெட்ரோல் வழங்கும் கருவியில் பொருத்தி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

அதாவது, இந்த கருவியின் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் 50 முதல் 60 மில்லி குறைவாக வாகனங்களில் நிரப்பும் வகையில் கணக்கீடு செய்வதில் மோசடி செய்ய முடியும். அதேநேரத்தில், விலையில் மாறுதல் இருக்காது.

பெட்ரோல் வழங்கும் கருவியில் உள்ள மின்னணு திரையில் வழக்கமான எரிபொருள் அளவும், விலையும் காட்டும். ஆனால், உள்ளுக்குள் லிட்டருக்கு 6 சதவீதம் வரை குறைவாகவே நிரப்பும். ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால், 940 மில்லி மட்டுமே வாகனத்தில் நிரப்பப்படும்.

இந்த மோசடி குறித்து அதிரடி சோதனை நடத்தியதுடன், இந்த மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கான அளவீட்டு செய்யும் கருவியை விற்பனை செய்த ரவீந்தர் என்பவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. மோசடி அளவீட்டை காட்டும் ஒரு கருவியை ரூ.3,000 என்ற விலையில் ரவீந்தர் விற்பனை செய்துள்ளான். ஒரு எஞ்சினியரிடம் இந்த சிப் தயாரிக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டிருக்கிறான்.

உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள 1,000 பெட்ரோல் நிலையங்களில் இந்த கருவியை விற்பனை செய்துள்ளதாகவும் அவன் தெரிவித்துள்ளான். இந்த மின்னணு கருவியை எளிதாக பெட்ரோல் வழங்கும் கருவில் பொருத்த முடியும் என்பதுடன், ரிமோட் கன்ட்ரோல் மூலமாக கட்டபடுத்த முடியும்.

இதனால், உத்தரபிரதேசத்தில் இயங்கி வரும் பெரும்பான்மையான பங்குகளில் இந்த மோசடி நடந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கருவியின் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை வருவாய் கிடைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாதந்தோறும் ஒவ்வொரு பெட்ரோல் நிலையமும் லட்சக்கணக்கான ரூபாயை இந்த மோசடி மூலமாக வருவாய் ஈட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த மோசடி உத்தரபிரதேசத்தில் மட்டும் நடந்துள்ளதா அல்லது நாடு முழுவதும் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் நடக்கிறதா என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை, பெட்ரோல் நிரப்பும்போது மட்டுமே மோசடி செய்து வந்ததாக கூறுவதுண்டு.

ஆனால், அதையும் தாண்டி தற்போது சிறிய கருவி மூலமாக எரிபொருள் அளவில் நடந்திருக்கும் இந்த மோசடி வாகன உரிமையாளர்களை கலங்க வைத்துள்ளது. இதுவரை பல கோடி ரூபாய் இந்த மின்னணு கருவி மூலமாக மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி அம்பலத்திற்கு வந்திருப்பதன் மூலமாக வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். நீண்ட காலமாக நற்பெயருடன் இயங்கும் பெட்ரோல் நிலையங்களை நாடுவது சிறந்தது. தரமான எரிபொருள் வழங்கும் பெட்ரோல் நிலையங்களை இனம் கண்டு அங்கு வாடிக்கையாக பெட்ரோல் நிரப்புங்கள்.

சந்தேகம் இருப்பின், பாட்டிலில் வாங்கி அளவு சரிபார்க்கலாம். 10 மில்லி அளவுக்கு குறைவிருந்தால் பரவாயில்லை. ஆனால், அதிக அளவு குறைவாக இருந்தால், அந்த பெட்ரோல் நிலையத்திற்கு செல்லாதீர்கள். பெட்ரோல் நிரப்பும்போதும் கவனமாக இருங்கள். பெட்ரோல் நிலைய ஊழியர் பேச்சுக் கொடுத்தாலும், அமைதியாக இருந்து பெட்ரோல் நிரப்பியுடன் பணத்தை தரவும்.

என்ன உஷாராக இருந்தாலும், இதுபோன்று உள்ளடி வேலை செய்யும் பங்குகளை அவ்வளவு எளிதில் இனம் காண முடிவதில்லை. எண்ணெய் நிறுவன அதிகாரிகளை நம்பி இருக்காமல், உத்தரபிரதேசம் போலவே, அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் அரசாங்கம் நேரடியாக ஆய்வு செய்வதும் அவசியமாகி இருக்கிறது.

இதனிடையே, பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்பட்டு இருக்கும் அதிரடி சோதனைகளுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், உத்தரபிரதேச அரசு தொடர்ந்து இதுபோன்ற அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Picture credit: Bhaskar


Click it and Unblock the Notifications








