நகல் ஓட்டுனர் உரிமத்துக்கு எல்.டி.ஆர் சான்று பெற ஆன்லைனில் பதிவு: காவல் துறை தகவல்!
நகல் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான காவல் துறையின் எல்.டி.ஆர் சான்றை ஆன்லைனிலேயே பெறுவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
அசல் வாகன ஓட்டுனர் உரிமம் கையில் எடுத்து வருவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், டிரைவிங் லைசென்ஸை தொலைத்தவர்கள், அதற்கான புகாரை ஆன்லைன் மூலமாக அளித்து சான்று பெறுவதற்கான வசதியை காவல்துறை அளிக்கிறது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து கமிஷனருக்கு, தமிழக காவல் துறையின் டிஜிபி ராஜேந்திரன் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களையும், ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை தொலைத்தவர்கள், அதனை ஆன்லைன் வசதியை பயன்படுத்தி எளிதில் பெறுவதற்கான வழிகளும் சொல்லப்பட்டுள்ளன.

வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவை தொலைந்து போனால், அதுபற்றி காவல் துறையில் ஆன்லைன் மூலமாகவே புகார் பதிவு செய்யும் வசதி இருக்கிறது. எல்.டி.ஆர் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த சேவை தொலைந்த ஆவணங்களுக்கான புகாரை பெற்று, சான்று அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
Recommended Video


www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக, தொலைந்து போன ஆவணம் குறித்து ஆன்லைன் மூலமாகவே புகார் பதிவு செய்ய முடியும். இந்த எல்.டி.ஆர் புகார் பதிவு செய்யும்போது அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வேண்டும்.

Lost Document Report (LDR) என்ற ஆவணம் காணாமல் போனது குறித்து மேற்கண்ட இணையதளத்தில் சென்று ஆன்லைனில் புகார் பதிவு செய்தவுடன், அதற்கு தனி அடையாள பதிவு எண் தரப்படும்.

அந்த அடையாள பதிவு எண்ணை வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து நகல் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றை பெற முடியும். தொலைந்து போன ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்த ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சரிபார்க்கப்படும்.

அப்போது, எல்.டி.ஆர் புகார் அளிக்கும்போது, பதிவேற்றம் செய்யப்பட்ட அரசு அடையாள அட்டையை போக்குவரத்து அதிகாரி சரிபார்த்துவிட்டு, பின்னர் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், நகல் ஓட்டுனர் உரிமம் அல்லது வாகனப் பதிவு சான்றிதழை வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பார்.

வாகன ஓட்டுனர் உரிமம் அல்லது வாகனப் பதிவு சான்று ஆகியவை தமிழகத்திற்குள் தொலைந்து போயிருந்தால் மட்டுமே, இந்த வசதியை பெற முடியும். வேறு மாநிலத்தில் தொலைந்து போனல், அங்குள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே புகார் பதிவு செய்து சான்று பெற்று வர வேண்டி இருக்கும்.

ஏற்கனவே தொலைந்து போன ஆவணங்கள் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும். அந்த நிகழ்வு உண்மையா என்பதை சோதித்து, பின்னரே, எல்.டி.ஆர் சான்று காவல் நிலையத்தில் வழங்கப்படும். இதற்கு நீண்ட காலதாமதம் ஏற்படும்.

ஆனால், தற்போது நூற்றுக்கணக்கானோர் அசல் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டி அணுகி வருவதால், இந்த வசதி குறித்து தமிழக டிஜிபி நேரடியாகவே அனைத்து வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலங்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மேலும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களிடம் காவல் துறையிடமிருந்து சான்று வாங்கி வருமாறு வற்புறுத்துமாறு கேட்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








