சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த இடி.. வீடு புகுந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகளால் மக்கள் பீதி
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, பல லட்சக்கணக்கான கார்களை வீடு புகுந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, பல லட்சக்கணக்கான கார்களை வீடு புகுந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதனால் பீதியடைந்துள்ள மக்கள், அடிமாட்டு விலைக்கு தங்கள் கார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் டூவீலர், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உடனடியாக மாறுவதில் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களைதான் மக்கள் தொடர்ச்சியாக வாங்கி கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்தியாவிலேயே காற்று மிகவும் மாசடைந்த பகுதிகளில் ஒன்றாக தேசிய தலைநகர் பகுதி (National Capital Region-NCR) விளங்குகிறது. தேசிய தலைநகர் பகுதி என்பது, டெல்லி, ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில முக்கியமான நகரங்களை உள்ளடக்கியதாகும்.

டெல்லி, நொய்டா, மீரட், குர்கான், காசியாபாத், பரிதாபாத், ரோஹ்டக் உள்ளிட்ட நகரங்கள் தேசிய தலைநகர் பகுதியின் கீழ் வருகின்றன. இங்கு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்படி இந்த வழக்கு நேற்று முன் தினம் (அக்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தலைநகர் பகுதியில் பயணிக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கான நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. எனவே மேற்குறிப்பிட்ட கார்களை அதிரடியாக பறிமுதல் செய்யும் பணிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்கியுள்ளனர்.

தேசிய தலைநகர் பகுதியில் உள்ள சாலைகளில் இனி 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்கள் பயணித்தால் உடனே பறிமுதல் செய்யப்படும். இதுதவிர வீடு புகுந்து கார்களை பறிமுதல் செய்யவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதுதான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்பின் அந்த கார்களினுடைய உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை பறிமுதல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதில், பெரும்பாலானோர், மிக அவசர அவசரமாக தங்கள் கார்களை அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிடைத்த வரை லாபம் என்பது மட்டுமே அவர்களின் எண்ணமாக உள்ளது.

தேசிய தலைநகர் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், தங்கள் கார்களை மிகவும் குறைந்த விலைக்கு அவர்கள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் அங்கு இந்த கார்களை பயன்படுத்த தடை எதுவும் இல்லை.

எனவே ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற அதிக விலை கொண்ட லக்ஸரி கார்கள் கூட மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையாளர்கள் பலரும் தற்போது தேசிய தலைநகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கார்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கி, அவற்றை வேறு பகுதிகளில் நல்ல லாபத்திற்கு விற்பனை செய்து விடலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தேசிய தலைநகர் பகுதியை சேர்ந்த கார் உரிமையாளர்கள் முகத்தில் தற்போது ஒரு விதமான பீதியை உணர முடிகிறது.

10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களை வீடு புகுந்து பறிமுதல் செய்யவும், அவற்றின் ரிஜிஸ்ட்ரேஷனை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த நடவடிக்கை நாளை (நவ.1) முதல் தொடங்கலாம்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் அபத்தமானது என கார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கார் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முறையான பராமரிப்பின் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு மேலான ஒரு சில டீசல் கார்களும், 15 ஆண்டுகளுக்கு மேலான ஒரு சில பெட்ரோல் கார்களும், அதை விட குறைந்த வயதுடைய கார்களை காட்டிலும் சுற்றுச்சூழலை மிக குறைவாகதான் மாசுபடுத்துகின்றன.

எனவே அனைத்து கார்களையும் புகை உமிழ்வு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதில், தேர்ச்சி பெறும் கார்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு இப்படியான ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சரி, 10 ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடைய டீசல் கார்களும், 15 ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடைய பெட்ரோல் கார்களும் சுற்றுச்சூழலை அதிகமாக மாசுபடுத்தினால் என்ன செய்யப்போகிறீர்கள்? எனவே அனைத்து கார்களுக்கும் புகை உமிழ்வு பரிசோதனை நடத்துவதே சரியானதாக இருக்கும்'' என்றார்.

இதனிடையே தேசிய தலைநகர் பகுதியில் உள்ள 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications