கார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
தமிழகத்தில் கார் உரிமையாளர் ஒருவர் மீது போலீசார் திடீரென வழக்கு பதிவு செய்துள்ளனர். இனி இந்த தவறை செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கார் உரிமையாளர் ஒருவர் மீது போலீசார் திடீரென வழக்கு பதிவு செய்துள்ளனர். இனி இந்த தவறை செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உலகிலேயே சாலை விபத்துக்களினால், மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா உருவெடுத்து நிற்கிறது.

இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு சாலை விபத்துக்களின் காரணமாக மட்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.50 லட்சம். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து, கை, கால்களை இழந்து வாழ்நாள் முழுவதும் துன்பப்படுகின்றனர்.

சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது போன்றவை சாலை விபத்துக்களுக்கான மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

இதுதவிர உரிய முறையில் லைசென்ஸ் பெறாமல் வாகனங்களை இயக்குபவர்களாலும், அதிக அளவிலான சாலை விபத்துக்கள் அரங்கேறுகின்றன. இந்தியாவில் வாகனம் இயக்குவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் எளிமையானவைதான்.

அப்படி இருந்தும் கூட டிரைவிங் லைசென்ஸ் பெறாமலேயே பலர் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதுதவிர முறைகேடான வழிகளில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றும், ஒரு சிலர் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர்.

யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வாகனங்களை இயக்குவதற்கான முழு தகுதி தனக்கு உள்ளது என்பதை உரிய முறையில் நிரூபணம் செய்யாமல், வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கும் இத்தகைய நபர்களாலும், அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான வயது வரம்பு 18ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 வயதை எட்டிய நபர்களால்தான், இந்தியாவில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெற முடியும் என்பது விதி.

ஆனால் 18 வயதை எட்டாத சிறுவர்கள் பலர் சாலைகளில் சர்வ சாதாரணமாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கின்றனர். விதியை மீறும் இத்தகைய சிறுவர்களாலும், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்படி உரிய வயதை எட்டாமலேயே வாகனங்களை இயக்கும் சிறுவர்களை, அவர்களது பெற்றோர்களே ஊக்குவிப்பதுதான் விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது. அத்தகைய பெற்றோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபரீதங்கள் கட்டுக்குள் வரும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர். இதில், 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தனர்.

ஆனால் அதன்பின்பாக பெரிய அளவில், கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.

போலீசார் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதும், ஆனால் அதன்பின்பாக பெரிய அளவிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதும் தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இம்முறை போலீசார் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு, விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவு நேரத்தில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. விசாரிப்பதற்காக அந்த காரை நிறுத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அந்த காரை ஓட்டி வந்தது வெறும் 14 வயதே நிரம்பிய ஒரு சிறுவன். அந்த சிறுவன் தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து கொண்டிருப்பது, விசாரணையில் கண்டறியப்பட்டது. 14 வயதே நிரம்பிய ஒரு சிறுவன், தேசிய நெடுஞ்சாலையில், அதுவும் நள்ளிரவில், காரை ஓட்டி வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அந்த காரின் உரிமையாளரும், சிறுவனின் உறவினருமான ஸ்ரீதர் என்பவர் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, குஜராத் மாநிலத்தில், 14 வயது மட்டுமே நிரம்பிய ஒரு சிறுவன் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக இத்தகைய விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே வந்தன.

எனவேதான் உரிய டிரைவிங் லைசென்ஸ் பெறாத, 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை வாகனங்கள் இயக்க அனுமதிக்கும் பெற்றோர்கள் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் இதற்கான நடவடிக்கை மிக தீவிரமாக எடுக்கப்பட்டது. சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு சிலருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே பாணியிலான நடவடிக்கைகளை தமிழக போலீசாரும் இனி எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பெற்றோர்களும், வாகன உரிமையாளர்களும் கவனமாக இருந்து கொள்வதே நல்லது.


Click it and Unblock the Notifications








