பதறியடித்து கொண்டு டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்கும் வாகன ஓட்டிகள்... காரணம் இதுதான்...
வாகன ஓட்டிகள் சிலர் தங்களது டிரைவிங் லைசென்ஸை பதறியடித்து கொண்டு போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதற்கான காரணம் தெரிந்தால், இனி இந்த தவறை வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் செய்யவே மாட்டீர்கள்.
வாகன ஓட்டிகள் சிலர் தங்களது டிரைவிங் லைசென்ஸை பதறியடித்து கொண்டு போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதற்கான காரணம் தெரிந்தால், இனி இந்த தவறை வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் செய்யவே மாட்டீர்கள்.

உலகிலேயே அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சாலை விபத்துக்களின் காரணமாக, இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் பேர் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization-WHO) சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சாலை விபத்துக்களை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, குடி போதையில் வாகனங்களை ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் அனைவரின் மீதும், எவ்வித பாரபட்சமும் காட்டாமல், கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாநகர போக்குவரத்து போலீசார் அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். சிக்னல்களில் சிகப்பு விளக்கை பொருட்படுத்தாமல் கடந்து சென்ற 900 வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல் போக்குவரத்து துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள நபர்களின் டிரைவிங் லைசென்ஸை 3 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''போக்குவரத்து துறையிடம் நாங்கள் வழங்கியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாங்கள் 7 நாள் காலக்கெடு கொடுத்துள்ளோம்.

இந்த 7 நாள் கெடுவிற்குள், டிரைவிங் லைசென்ஸை ஒப்படைக்கும்படி அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, டிரைவிங் லைசென்ஸை ஒப்படைக்க மறுக்கும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் விதித்துள்ள 7 நாள் காலக்கெடு கடந்த 7ம் தேதியே தொடங்கி விட்டது. வரும் 13ம் தேதியுடன் (நாளை) இந்த காலக்கெடு முடிவடைகிறது. நாளைக்குள் டிரைவிங் லைசென்ஸை ஒப்படைக்காத நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அத்துடன் நாங்கள் வழங்கிய நோட்டீசுக்கு இணங்கி, டிரைவிங் லைசென்ஸை ஒப்படைக்காத நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை, பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்கள் உள்பட பொது வெளியில் பகிர்ந்து விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடும் நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே, வாகன ஓட்டிகள் அனைவரையும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க முடியும்'' என்றார். இதனால் சிகப்பு விளக்கை மதிக்காமல் சென்று சிக்கிய வாகன ஓட்டிகள் பதற்றத்தில் உள்ளனர்.

இதில் சிலர் பதறியடித்து கொண்டு டிரைவிங் லைசென்ஸை ஒப்படைத்து வருகின்றனர். இதற்கு இரண்டே காரணங்கள்தான். முதலாவது காரணம், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விடுமோ? என்கிற அச்சம். இரண்டாவது காரணம், சமூக வலை தளங்களில் பெயர் கெட்டு விடுமோ? என்கிற அச்சம்.

போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில், போலீசாரின் இத்தகைய அதிரடி நடவடிக்கைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், சிக்னல் என்ற ஒன்றை மதிப்பதே கிடையாது.

சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தாலும், அதனை சற்றும் மதிக்காமல், வாகனங்களை கிளப்பி கொண்டு அவர்கள் பறக்கின்றனர். சிக்னலில் காத்திருக்க போதிய பொறுமை இல்லாததே இதற்கு முக்கிய காரணம். ஆனால் இதன் காரணமாக விபத்துக்கள் நேர்வதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

எனவேதான் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதன்மூலமாக சிக்னலை மதிக்காமல் வாகனங்களை இயக்கும் நபர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








