ஒருவழியாக இந்த பிரச்னையில் இருந்து மீண்டது ஹோண்டா... இதற்கு காரணம் நீங்கள்தான்...
ஹோண்டா கார் நிறுவனம் பிரச்னை ஒன்றில் இருந்து மீண்டு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹோண்டா கார் நிறுவனம் பிரச்னை ஒன்றில் இருந்து மீண்டு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள மினாட்டோ சிட்டியை தலைமையிடமாக கொண்டு, ஹோண்டா நிறுவனம் செயல்பட்டு கொண்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்புகளை ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் குரூப், ஹூண்டாய் மோட்டார் குரூப், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, நிஸான், ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிறகு, உலகின் 8வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக, 2015ம் ஆண்டில் உருவெடுத்தது ஹோண்டா.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஹோண்டா நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றுதான் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Ltd-HCIL). இந்நிறுவனத்தின் வாயிலாகதான் இந்தியாவில் ஹோண்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்தின் அமேஸ், சிட்டி, ஜாஸ், அக்கார்டு, சிஆர்-வி மற்றும் பிஆர்-வி உள்ளிட்ட கார் மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. என்றாலும் கூட, 2017ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 227.24 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்தது.

இந்த சூழலில் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்து, வளர்ச்சி பாதைக்கு திரும்பியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், 2018ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 257.3 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

இந்நிறுவனத்தின் செடான் வகை கார்களின் விற்பனை அதிகரிப்பு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு ஆகியவைதான், லாபம் ஈட்டியிருப்பதற்கான மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

இந்த சூழலில் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி முதல், அதாவது இன்னும் ஒரு சில நாட்களில், இந்நிறுவன கார்களின் விலை உயர உள்ளது.

ஆனால் விலை உயர்வு எவ்வளவு? என்பது தொடர்பாக ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், தற்போது வரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. விலையை எவ்வளவு உயர்த்தலாம் என தற்போது ஆலோசனை நடந்து கொண்டுள்ளது.

இதன்முடிவில்தான் விலை உயர்வு எவ்வளவு? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். எனவே ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் லாபம் வருங்காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








