காருக்குள் கணவன் மனைவி சண்டையால் விபரீதம்... 4 உயிர்கள் பறிபோன பரிதாபம்!
கார் ஓட்டிபோது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது. கோபத்தில் காரை அதிவேகத்தில் கணவன் ஓட்டிதால், கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த ஆட்டோரிக்ஷா மீது மோதியது.
கார் ஓட்டிபோது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவத்தில் கார் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்தனர்.

இந்திய கப்பற்படையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் தேவ் பிரதாப்[28]. அவரது மனைவி பிரியங்கா பிரதாப்[25]. தேவ் பிரதாப் ஜோத்பூரில் உள்ள கப்பற்படை தளத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் தங்களது புத்தம் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் வெளியில் சென்றுள்ளனர். காரை தேவ் பிரதாப் ஓட்டி இருக்கிறார். பயணத்தின்போது பேச்சுவாக்கில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதனை பின்னால் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துவிட்டார். பின்னர், கார் ஓட்டுனரிடம் சண்டை போட வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.

ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியதை தேவ் பிரதாப் கேட்கவில்லை. கோபத்தில் காரை அதிவேகமாக எடுத்துச் சென்றுள்ளார். இதனால், கார் தாறுமாறான வேகத்தில் சென்றுள்ளது.

பிகானேர் அருகே நோரங்தேசர் என்ற இடத்தில் அந்த கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த சாலையில் வந்த ஆட்டோரிக்ஷாவுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

அந்த ஆட்டோரிக்ஷாவில் 10 பேர் பயணித்துள்ளனர். அதில், மிரா தேவி[50] மற்றும் சுக்கா தேவி[45] ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அதில் பயணித்த மேலும் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையிலான சண்டைதான் விபத்துக்கு அடிப்படை காரணமாக தெரிய வந்துள்ளதாக உள்ளூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் சவாய் சிங் கோதரா தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த தேவ் பிரதாப் மீது தாறுமாறாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்த விபத்து இரண்டு விதமான கோணத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது.

காரில் பயணிக்கும்போது ஓட்டுனருக்கு கோபத்தையும், கவனக் குறைவையும் ஏற்படுத்தும் விதத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும். வீட்டு சண்டை சச்சரவுகளை வீட்டோடு விட்டு விடுங்கள்.

காரில் பயணிக்கும்போது கோபம் வந்தால் கூட, யாராவது ஒருவர் பேசாமல் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலமாக இதுபோன்ற பிரச்னைகளையும், விபரீதத்தையும் தவிர்க்க உதவும்.

இந்த விபத்தில் சண்டை போட்ட கணவன் மனைவி மட்டுமின்றி, ஆட்டோரிக்ஷாவில் வந்தவர்களில் இரண்டு உயிர்களும் பறிபோயுள்ளது. 8 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் செய்த தவறால் இன்று பல குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி இருக்கிறது.

விபத்தில் சிக்கிய புத்தம் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் மிக கடுமையாக சேதமடைந்தது. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வர இருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், விபத்தில் சிக்கிய புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் மிக பலத்த சேதமடைந்துள்ளது. ஆட்டோரிக்ஷாவில் மோதிய வேகத்தில் ஒரு பக்கம் முழுவதும் நசுங்கி கடுமையாக சேதமடைந்து இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வழக்கம்போல் மாருதி கார் என்றாலே, வலு குறைந்த கட்டமைப்பை பெற்றிருப்பதாக இருக்கும் பிம்பத்தை இந்த புதிய மாடலும் உறுதி செய்வது போலவே தெரிகிறது.
Story and Image Source: Rajasthan Patrika, Team-BHP


Click it and Unblock the Notifications








