இன்ஜினியர்கள் மீம் போட தான் லாயக்கா?.. தகுதியான இன்ஜினியர்கள் இல்லாமல் திணறும் ஆட்டோமொபைல் துறை
இன்று கர்நாடகாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் விஷ்வேஷ்வரய்யாவின் பிறந்த தினம் இந்த நாளை நாம் இன்ஜினியர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் ஏராளமான இன்ஜினியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்க வேலைதான் இல்ல
இன்று கர்நாடகாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் விஷ்வேஷ்வரய்யாவின் பிறந்த தினம். இந்த நாளை நாம் இன்ஜினியர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் ஏராளமான இன்ஜினியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலைதான் இல்லை என்ற பேச்சு நம் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக இந்த ஆட்டோமொபைல் மார்கெட் நிலவரம் உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி பார்வையை திருப்பியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் புதிதாக எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். தற்போது அந்த நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிக்க இன்ஜினியர்கள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

தற்போதைய மார்கெட் நிலவரப்படி சுமார் 5000 இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 15,000ஆக மாறக்கூடும், எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக், மெக்கானிக்கல் படித்த திறமையான இன்ஜினியர்களுக்கு தற்போது வேலை காத்திருக்கிறது.

தற்போது சுமார் 1000க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் எலெக்ட்ரிக் வாகனத்துறையில் பணியாற்றி வருகின்றனர். டாடா மோட்டார்ஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ், மஹிந்திரா, மாருதி சுஸூகி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன.

இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் கூறுகையில் "எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கு சிறந்த திறமையுள்ள இன்ஜினியர்களை தேர்ந்தெடுப்பது சவாலான காரியமாக உள்ளது. எதிர்காலத்தில் அதிக அளவிற்கு ஆட்கள் தேவைப்படுவர். ஆனால் திறமையானவர்களை தேர்ந்து எடுக்க அதிக சிரமப்பட்டு வருகிறோம்" என்றார்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலத்தில் பெரும் அளவிற்கு வளர்ச்சி பெறும். மேலும் இந்த எலெக்ட்ரிக் வாகன தொழிற்நுட்பமே எதிர்காலத்தில் டிரைவர் இல்லாத கார்களை தயாரிக்கும் தொழிற்நுட்பமாக மேம்படுத்தப்படும். அரசும் இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் மாசுவை தவிர்க்க இது போன்ற சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமைகளையும், சலுகைகளையும் வழங்குகிறது.

மொபிலிட்டி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான புதிய பாலிசி உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இந்த நிதியாண்டின் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் சுமார் 20,000 பேரை மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் பணிபுரிய ஆன்லைனில் தேர்வு நடத்தியது. அதில் அந்நிறுவனத்திற்கு தேவையான 30 சதவீத நபர்களை மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக அந்நிறுவனம் தேர்ந்தெடுக்க முடிந்தது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் 15,000 பேருக்கான வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால் அதில் 10,000 பேரை பணிக்கு அமர்த்துவதே கஷ்டமான காரியமாக இருக்கும் என டீம் லீஸ் என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆட்டோமொபைல் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சுமார் 1000 இன்ஜினியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஐஐடி, என்ஐடி போன்ற இன்ஸ்ட்டிடியூட்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.

தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜெர்மனியிலும், பெங்களூருவிலும் தங்களது ஆராய்ச்சி மையத்தை வைத்து நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம் நீடித்த உழைப்பை தங்களது விற்பனை கொள்கையாக கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனமும் கேம்பஸ் மூலம் ஆட்களை தேர்வு செய்வதில் திணறி வருகிறது. மாறாக தற்போது டாடாவில் உள்ள ஊழியர்களையே எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கு தயார் செய்து வருகிறது.

மாருதி சுஸூகி நிறுவனம் 2020ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்க போவதாக அறிவித்திருந்தது. அதற்காக 50 எலெக்ட்ரிக் வாகன ப்ரோட்டோ டைப் வாகனங்களை சோதனையிட உள்ளது. இந்நிறுவனம் இந்திய கிளைமேட் மற்றும் ரோடு கண்டிஷனுக்கு ஏற்ற வாகனத்தை தேர்வு செய்து தயாரித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டில் எக்கச்சக்க இன்ஜினியர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இன்ஜினியரிங் படித்தவர்கள் மீம் மட்டும் போடுவதாக பேச்சுக்கள் நிலவி வருகிறது. 90's கிட்ஸ் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்து விட்டு இன்று சம்மந்தமே இல்லாத துறையிலோ, திறமை இல்லாத காரணத்தால் குறைந்த சம்பளத்திலோ பணியாற்றி வருவதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாலாவின் பார்வையில்:
இந்தியாவில் எக்கச்சக்க இன்ஜினியரிங் பட்டதாரிகள் இருக்கிறார்கள். ஆனால் இன்ஜினியர்கள் குறைவுதான். அதாவது தங்கள் படித்த பாடத்தில் சற்று திறமைகளை வளர்த்து கொண்டு அந்த துறையில் போய் பணி புரியும் அளவிற்கு கூட சிலர் தகுதிகளை வளர்த்து கொள்ள முடிவதில்லை இதற்கு முக்கிய காரணம் கல்வி முறைதான். இன்றைய கல்வி முறையில் படிக்காமலேயே கூட பாஸ் செய்ய முடியும். இதை மாற்றினால் மட்டுமே இந்த சூழ்நிலை மாறும். அதுவரை இந்தியாவில் படித்த இளைஞர்கள் இருப்பார்கள். ஆனால் அதில் வேலைக்கு தகுதியான இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகதான் இருக்கும்.
More from DriveSpark
இந்தியாவில் உள்ள இன்ஜினியர்களை கொண்டு இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








