அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் !!
பஜாஜ் க்யூட் நான்கு சக்கர பயணிகள் வாகனத்திற்கு அனுமதி கிடைத்திருப்பதால், விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் க்யூட் நான்கு சக்கர பயணிகள் வாகனத்திற்கு அனுமதி கிடைத்திருப்பதால், விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனம் மற்றும ஆட்டோரிக்ஷா தயாரிப்பில் புகழ்பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மிகச் சிறிய நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கியது. ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக நகர்ப்புறங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப குவாட்ரிசைக்கிள் என்று குறிப்பிடப்படும் புதிய ரகத்தில் இந்த நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்ததுடன் க்யூட் என்று பெயரிட்டு அறிமுகம் செய்தது.

ஆனால், இந்த வாகனம் கிராஷ் டெஸ்ட்டில் தேறாது, விபத்து அபாயம் அதிகம் என்று கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் இந்த வாகனத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

இதுஒருபுறம் இருந்தாலும், 2015ம் ஆண்டு முதல் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தின் ஏற்றுமதி துவங்கியது. எனினும், இந்தியாவில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வாகனம் முதல்கட்டமாக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மாநிலங்களில் தொழில்நுட்ப ரீதியில் இந்த வாகனத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி இருப்பதே அங்கு முதலில் விற்பனைக்கு வருகிறது.

கேரளாவிற்கு 35 முதல் 40 க்யூட் வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், முன்பதிவும் ஏற்கப்படுவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் மேற்கண்ட மாநிலங்களில் பஜாஜ் க்யூட் வாகனத்தின் டெலிவிரி துவங்கப்பட இருக்கிறது.

எனினும், பஜாஜ் க்யூட் வாகனத்தின் விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் விலை விபரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் ரூ.3 லட்சம் மதிப்பில் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பின் பஜாஜ் க்யூட் வாகனத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எது எப்படி இருந்தாலும், தற்போது அனுமதி கிடைத்திருப்பது, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு பெரிய நிம்மதியை வழங்கி இருப்பதாகவே கருத முடியும்.
Source: MoneyControl


Click it and Unblock the Notifications








