தெரிந்தே விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய வாலிபர்... வைரல் வீடியோ
விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு, வாலிபர் ஒருவர் தக்க பாடம் புகட்டினார். சமூக வலை தளங்களில், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு, வாலிபர் ஒருவர் தக்க பாடம் புகட்டினார். சமூக வலை தளங்களில், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சாலை விபத்துக்களின் காரணமாக, உலகிலேயே அதிக அளவிலான நபர்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்து கொண்டுள்ளனர். இப்படி போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக கடைபிடிக்காததே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை, ராங் சைடில் (Wrong Side) வாகனங்களை இயக்குவது சர்வ சாதாரணமான ஒன்றாக உள்ளது. நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் வாகனங்களை இயக்குகின்றனர்.

ராங் சைடில் வரும் வாகனங்களால், தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கும் இது வழிவகுத்து விடுகிறது. அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதற்கும் இது ஒரு முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்தும் கூட பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர். அரசு பஸ் டிரைவர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. அரசு டிரைவர்களும் கூட சில சமயங்களில், ராங் சைடில்தான் பஸ்ஸை இயக்குகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பெங்களூரு பெருநகர அரசு போக்குவரத்து கழக (BMTC-Bangalore Metropolitan Transport Corporation) டிரைவர் ஒருவர், சமீபத்தில் திடீரென ராங் சைடில் பஸ்ஸை இயக்க தொடங்கினார்.

அப்போது எதிர் திசையில், ட்ரையம்ப் டேடோனா 675 பைக்கில், திஷங்க் கவுடா என்ற வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அரசு பஸ் டிரைவர், விதிமுறைகளை மீறி ராங் சைடில், பஸ்ஸை ஓட்டி கொண்டு வருவதை கண்டு அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.

எனவே அந்த பஸ்ஸின் டிரைவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய திஷங்க் கவுடா, பஸ்சுக்கு முன்பாக தனது பைக்கை கொண்டு சென்று நிறுத்தினார். இதனால் மேற்கொண்டு செல்ல வழி இல்லாததால், அரசு பஸ்ஸின் டிரைவரும் பஸ்ஸை அப்படியே நிறுத்தி விட்டார்.

இதுதொடர்பாக திஷங்க் கவுடா மற்றும் அரசு பஸ்ஸின் டிரைவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தவறு செய்ததை அப்போதும் உணர்ந்து கொள்ளாத அரசு பஸ்ஸின் டிரைவர் மற்றும் அதன் கண்டக்டர் ஆகியோர், திஷங்க் கவுடாவிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள், திஷங்க் கவுடாவிற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில், சில பைக் மற்றும் கார்கள், அரசு பஸ் வந்த அதே ராங் சைடில் வந்தன. அந்த வாகனங்களை எல்லாம் திஷங்க் கவுடா சரியான பாதையில் பயணிக்குமாறு திருப்பி அனுப்பினார்.

அத்துடன் அரசு பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து சென்று, சரியான பாதையில் வருமாறும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்தார். இதனால் வேறு வழியே இல்லாத அரசு பஸ் டிரைவர், இறுதியாக பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து சென்று, மீண்டும் சரியான பாதையில் பயணித்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த சம்பவங்கள் எல்லாம், திஷங்க் கவுடாவின் ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. MR. White Panda வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்யூவி வகை கார் ஒன்று, இந்த அரசு பஸ்ஸை போலவே ராங் சைடில் வந்தது. இதைக்கண்ட இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், திஷங்க் கவுடாவின் பாணியில், அதனை திருப்பி அனுப்ப முயற்சி செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காரின் டிரைவர், இரு சக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கினார். ஆனால் நல்ல வேளையாக திஷங்க் கவுடாவிற்கு அத்தகைய விபரீதம் எதுவும் நடைபெறவில்லை. ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

போலீசார் இல்லாத இடங்களில், சிசிடிவி கேமராக்களை நிறுவி, இதன் மூலமாக ராங் சைடில் வரும் வாகன ஓட்டிகளை கண்டறிந்தும் அபராதம் விதிக்கலாம். இத்தகைய கடும் நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே, ராங் சைடில் வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்.

இதனை குஜராத் அரசு நன்றாக புரிந்து கொண்டுள்ளது. அங்கு ராங் சைடில் வாகனம் இயக்கும் நபர்களுக்கு, மிக விரைவில் கடுமையான அபராதம் விதிக்கப்படவுள்ளது. அத்துடன் அத்தகைய நபர்களுக்கு, வாகனங்களை இயக்க வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

குஜராத்தை பின்பற்றி இத்தகைய மிக கடுமையான நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் எடுக்க முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








