சென்னை பிஎம்டபிள்யூ ஆலையின் 11ம் ஆண்டு கொண்டாட்டம்!
சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலை தனது 11வது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது.
சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலை துவங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிஎம்டபிள்யூ தலைவர் விக்ரம் பாவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கமான சம்பிரதாய கொண்டாட்டமாக இல்லலாமல் இதனை பயனுள்ள வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது பிஎம்டபிள்யூ நிறுவனம். எதிர்காலத்தில் திறன் மிக்க பொறியாளர்களை உருவாக்கும் விதத்தில், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு 'ஸ்கில்நெக்ஸ்ட்' என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை பிஎம்டபிள்யூ துவங்கி இருக்கிறது.

அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியியல் பயிலும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் இணைந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்-3 காரில் எஞ்சின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் பாகங்களை சச்சின் டெண்டுல்கர் பொருத்தி, 'ஸ்கில்நெக்ஸ்ட்' பயிற்சி திட்டத்தை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது பேசிய சச்சின் டெண்டுல்கர், "மாணவர்கள் பாடப் புத்தகத்தில் படித்து புரிந்து கொள்வதைவிட, இதுபோன்ற நேரடி செயல்முறை பயிற்சியின் மூலமாக எளிதாக எஞ்சின் இயங்கும் விதம் மற்றும் அதன் பாகங்கள் ஒருங்கிணைக்கப்படுவது குறித்து எளிதாக புரிந்து கொள்வதுடன், பாடத்தின் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கும்,' என்று தெரிவித்தார்.

இந்த ஸ்கில்நெக்ஸ்ட் பயிற்சி திட்டத்திற்காக 365 எஞ்சின்களையும், டிரான்ஸ்மிஷன்களையும் பொறியியல் கல்லூரிகளுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் இலவசமாக வழங்க இருக்கிறது. முதலில் வரும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த எஞ்சின்கள் வழங்கப்படும் என்று பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா தெரிவித்தார்.

இந்த எஞ்சின்களை கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் மட்டுமே பரிசோதிக்க அறிவுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை பிஎம்டபிள்யூ ஆலையின் கார் ஒருங்கிணைக்கப்படும் பல்வேறு பிரிவுகளை சுற்றி பார்க்கும் வாய்ப்பும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, பத்திரிக்கையாளர்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் விளக்கினர்.

ஆலையின் ஒரு இடத்தில் ராட்சத தட்டு அடுக்குகளில் பிஎம்டபிள்யூ கார்களின் உடல்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அங்கிருந்துதான் ஒவ்வொரு உடல்கூடாக எடுக்கப்பட்டு, அதில் பாகங்கள் சேர்க்கப்பட்டு காராக உருமாறுகிறது.

பம்பர், இன்டீரியர் ஃபேப்ரிக் உள்ளிட்டவற்றை மிகவும் கவனமாக அங்குள்ள பணியாளர்கள் பொருத்துகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் ஒருங்கிணைக்கும் பணி முடிந்தவுடனே, சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் முறையும் சிறப்பாக கையாளப்படுகிறது.

ஒரு பிரிவில் பாகங்கள் கோர்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட உடன் அடுத்த பிரிவுக்கு ராட்சத கிரேன் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த நடைமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அடுத்த பிரிவுக்கு சேர்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட உடன் அதனை சோதனை செய்வதற்கு பிரத்யேக எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹெட்லைட்டுகள் சரியான கோணத்தில் கோர்க்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதை படத்தில் காண்கிறீர்கள்.

மேலும், ஆய்வு செய்வதற்கான எந்திரங்கள் டிராலிகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு டிராலிக்கும் ஒரு பெயரில் குறிப்பிட்டு அழைக்கின்றனர். படத்தில் காணும் டிராலி பச்சைக் கிளி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு இருப்பதை காணலாம்.

டிராலி மட்டுமில்லை, அங்கிருக்கும் சில ஒருங்கிணைப்பு பிரிவுகளும் வித்தியாசமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. படத்தில் ஒருபிரிவுக்கு நாதஸ்வரம் என்ற தமிழரின் பாரம்பரிய இசைக் கருவியின் பெயரில் குறிப்பிடப்பட்டு இருப்பதை காணலாம்.

ஆலை முழுவதும் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதை காண முடிந்தது. அதேபோன்று, திறன் வாய்ந்த பணியாளர்கள் இங்கு கார்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுடன், சர்வதேச தரத்திலான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








