பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!
பட்ஜெட்டில் இறக்குமதி உதிரிபாகங்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் கார் மற்றும் பைக்குகளின் விலை அதிகரிக்க உள்ளது.
பட்ஜெட்டில் சுங்க வரி அதிகரிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் பிரிமியம் பைக்குகளின் விலை அதிகரிக்க இருக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி இருமடங்கு அதிகம் என்பதால், பல சொகுசு கார் நிறுவனங்கள் முக்கிய பாகங்களாக தருவித்து இந்தியாவில் அசெம்பிள் செய்து கார்களை விற்பனை செய்து வருகின்றன.
இதே நடைமுறையைத்தான் பிரிமியம் பைக் நிறுவனங்களும் பின்பற்றி அசெம்பிள் செய்கின்றன.

எஞ்சின், ட்ரான்மிஷன் உள்ளிட்ட பல முக்கிய பாகங்கள் தங்களது தாய் நாட்டிலோ அல்லது வேறு நாட்டில் உள்ள தங்களது ஆலையிலிருந்து அந்நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்கின்றன.
Recommended Video


பின்னர் இங்குள்ள ஆலைகளில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் கார் மற்றும் பைக்குகள் விற்பனைக்கு செல்கின்றன. இதனால், கணிசமான அளவு வரியை மிச்சப்படுத்த முடிவதால், விலையை சவாலாக நிர்ணயிக்க முடிகிறது.

ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ, ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற கார் நிறுவனங்களும், ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ஃப் உள்ளிட்ட பிரிமியம் பைக் நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றிதான் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன.

இந்த நிலையில், பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத சுங்கவரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த பைக்குகளின் விலை உயர இருக்கிறது.

உதாரணமாக ரூ.25 லட்சம் மதிப்புடைய சொகுசு காரின் விலை ரூ.80,000 வரை உயரும். தற்போது ரூ.1.5 கோடி விலை மதிப்புடைய கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. அவை அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூடுதல் சுமை வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தப்படும்.

அதேபோன்று, முழுமையாக கட்டப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பஸ் மற்றும் டிரக்குகளுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதால், இந்த துறையில் பெரிய பாதிப்பு இருக்காது.

அதேநேரத்தில், முழுமையாக கட்டடைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள் மற்றும் பைக்குகள் மீதான இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








