80 லட்ச ரூபாய் காரை சின்னாபின்னமாக்கியது இதற்குதான்! தொழிலதிபரின் மனித நேயத்திற்கு குவியும் பாராட்டு
80 லட்ச ரூபாய் மதிப்புடைய பென்ஸ் காரை, தொழிலதிபர் ஒருவர் சின்னாபின்னமாக்கியுள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
80 லட்ச ரூபாய் மதிப்புடைய பென்ஸ் காரை, தொழிலதிபர் ஒருவர் சின்னாபின்னமாக்கியுள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அவர் எதற்காக இப்படி செய்தார்? என்று தெரிந்தால், நிச்சயமாக நீங்களும் அவரை பாராட்டுவீர்கள்.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த தொழிலதிபர் ஜெயஸ்பாய் டெய்லர். வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் ஒன்று உள்ளது. செடான் வகையை சேர்ந்த இந்த காரின் விலை சுமார் 80 லட்ச ரூபாய்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு, ஜெயஸ்பாய் டெய்லர் தனது குடும்பத்துடன், மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.

உடன் அவர்களின் வளர்ப்பு நாயும் பயணம் செய்தது. செல்லும் வழியில் மியாவ்... மியாவ்... என பூனை குட்டி ஒன்றின் சப்தம் கேட்டு கொண்டே இருந்தது. இதனால் ஜெயஸ்பாய் டெய்லரின் வளர்ப்பு நாய் குரைத்து, காரில் பூனை குட்டி ஒன்று இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியது.

இதனால் காரை ஒரு ஓரமாக நிறுத்தும்படி, டிரைவருக்கு ஜெயஸ்பாய் டெய்லர் உத்தரவிட்டார். இதன்பேரில் கார் சாலையோரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஜெயஸ்பாய் டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் கார் முழுவதும் தேடிப்பார்த்தனர். அவர்களால் பூனை குட்டியை கண்டறிய முடியவில்லை.

ஆனால் மியாவ்... மியாவ்... என்ற சப்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில், ஜெயஸ்பாய் டெய்லரின் வளர்ப்பு நாய், காரினுடைய இன்ஜின் பேவுக்கு (Engine Bay) சென்றது. அங்கு நின்றவாறு தொடர்ச்சியாக குரைத்து கொண்டே இருந்தது.

அப்போதுதான் காரின் இன்ஜின் பேவுக்குள், சிறிய பூனை குட்டி ஒன்று சிக்கி கொண்டிருக்கும் விஷயம் ஜெயஸ்பாய் டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. ஆனால் அவர்களால் பூனை குட்டியை பார்க்க முடியவில்லை.

காரின் இன்ஜின் பே என்பது மிகவும் சிக்கலான பகுதி. இதில், ஏராளமான இயந்திரங்கள் இருக்கும். நிறைய ஒயர்கள் செல்லும். இதனால்தான் அவர்களால் பூனை குட்டியை பார்க்க முடியவில்லை. என்றாலும் பூனை குட்டியின் மியாவ் சப்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது.

ஜெயஸ்பாய் டெய்லரின் நிலையை அறிந்த அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். பூனை குட்டியை மீட்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சியும் தோல்வியடைந்தது. அவர்களாலும் பூனை குட்டியை மீட்க முடியவில்லை.

ஆனால் பூனை குட்டியை மீட்டே ஆக வேண்டும் என ஜெயஸ்பாய் டெய்லர் உறுதியாக இருந்தார். எனவே சில மெக்கானிக்குகள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களும் பூனை குட்டியை மீட்க முடியாது என கையை விரித்து விட்டனர்.

இறுதியாக மும்பையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டருக்கு ஜெயஸ்பாய் டெய்லர் தகவல் தெரிவித்தார். சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு வரும்படி அவர்கள் தெரிவித்தனர். இதன்பேரில் கார் மிகவும் மெதுவாக சர்வீஸ் சென்டருக்கு ஓட்டி செல்லப்பட்டது.

அவர்கள் பூனை குட்டியை பார்க்க முயன்றனர். ஆனால் அவர்களாலும் அது முடியவில்லை. அந்த நேரத்தில் மியாவ் சப்தமும் திடீரென நின்று போனது. யாராவது காப்பாற்றுவார்கள் என பொறுத்து பொறுத்து பார்த்த பூனை குட்டி இறுதியில் தூங்கி விட்டது போல!

இதனால் காரின் இன்ஜின் பேவை முழுவதுமாக டிஸ்மேன்டில் செய்தால் மட்டுமே பூனை குட்டியை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. சற்றும் யோசிக்காத ஜெயஸ்பாய் டெய்லர், இன்ஜின் பேவை அகற்றும்படி மெக்கானிக்குகளிடம் கூறி விட்டார்.

இதன்பின் மெக்கானிக்குகள் இன்ஜின் பேவை அகற்றி, பூனை குட்டியை பத்திரமாக மீட்டனர். இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுமார் 6 மணி நேரத்திற்கு பின் இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. காரின் இன்ஜின் பேவுக்கு சிக்கி கொண்டிருந்தது பெண் பூனை குட்டி ஆகும்.

மீண்டும் பொருத்தி கொள்ளலாம் என்றாலும், ஒரு பூனை குட்டியை காப்பாற்றுவதற்காக 80 லட்ச ரூபாய் மதிப்புடைய ஒரு லக்ஸரி காரின் இன்ஜின் பேவை முழுவதுமாக அகற்ற அனைவருக்கும் மனம் வருமா? என்பது நிச்சயமாக சந்தேகம்தான்.

தற்போது இந்த சம்பவம் இந்தியா முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் ஜெயஸ்பாய் டெய்லர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். விலங்குகள் ஆர்வலர்கள் மட்டுமல்லாது, பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும், அவருக்கு பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

பூனை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள், கார்களின் இன்ஜின் பேவால் ஈர்க்கப்படுகின்றன. இதற்கு காரணம் இன்ஜின் பேவுக்குள் கிடைக்கும் வெப்பம்தான். குறிப்பாக குளிர்காலங்களில்தான் இன்ஜின் பேவை விலங்குகள் அதிகம் நாடி செல்கின்றன. அப்படி சென்றபோதுதான் இந்த பூனை குட்டியும் சிக்கி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications