சென்னையில் பெருகி வரும் போலி டாக்ஸி ஆப்கள்… பொதுமக்களே உஷார்…!
சென்னையில் சொந்த பயன்பாட்டிற்கு என பதிவு செய்யப்பட்ட கார்களை கேப்ஸ் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாக 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நவீன ரக மொபைல் ஆப்கள் மூலம் இந்த கேப் நிறுவனங்கள் நடத்தப
சென்னையில் சொந்த பயன்பாட்டிற்கு என பதிவு செய்யப்பட்ட கார்களை கேப்ஸ் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாக 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நவீன ரக மொபைல் ஆப்கள் மூலம் இந்த கேப் நிறுவனங்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சொந்த பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்படும் கார்களை, கேப்ஸ் மற்றும் டூரிஸ்ட் வாகனங்களாக பயன்படுத்த கூடாது என்ற சட்டம் இருக்கிறது. கேப்ஸ் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு தனியாக வரி விதிக்கப்படுவதால் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீப காலமாக, நவீன தொழில்நுட்ப முறையில் செல்போன் ஆப்கள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் கேப் சர்வீஸ்கள் நடந்து வருகிறது. முக்கியமாக இந்த துறையில் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த இரு நிறுவனங்களின் வெற்றியை பார்த்த பலர் தாங்களும் இதே போன்ற ஒரு தொழில்நுட்பத்தை தங்கள் தொழில்களில் புகுத்தி வருகின்றனர். புதிதாக தொழில் துவங்க நினைக்கும் பலரும் செல்போன் ஆப்ஸை நம்பி கேப்களை புக் செய்ய துவங்கிவிட்டனர்.

சமீபகாலமாக இவ்வாறான நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில் சில சட்ட விரோதமாக இயங்கும் நிறுவனங்களும் தற்போது செயல்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் சொந்த பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை கேப்ஸ் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து முறையாக பதிவு செய்யப்பட் கேப்ஸ் நிறுவன உரிமையாளர்கள், இவ்வாறு சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய காரை கேப்ஸ் பயன்பாட்டிற்காக சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் தங்கள் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக போக்குவரத்து துறையினரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து போக்குவரத்து துறையினர் பல்வேறு வகையிலான ரகசிய விசாரணைகளை மேற்கொண்டு சில சட்ட விதிமுறைகளை மீறும் நிறுவனங்களை கண்டுபிடித்தனர்.

அதன் பின்பு நேற்று சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், மந்தைவெளி, திருவான்மியூர் போன்ற இடங்களில் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய வாகனத்தை கொண்டு கேப்ஸ் பயன்பாட்டிற்காக பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

இந்த மூன்று கார்களும் பாண்டிசேரியில் பதிவு செய்யப்பட்ட கார்களாகும். மேலும் ஆர்டிஓ அதிகாரிகள் நேற்று இவ்வாறான சட்டவிரோத கேப்களை இயக்கும் நிறுவனங்களின் ஆப்கள் மூலம் கேப்களை புக் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் புக் செய்யும் போது எல்லாம் தானாக புக்கிங் கேன்சல் ஆனதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக சென்னை - பெங்களூரு இடையே இது போன்ற சட்ட விரோதமாக சொந்த பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கேப்ஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது.

சில கேப்ஸ் நிறுவனங்கள் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் வாகனத்தை வைத்திருப்பவர்கள் வெளியூருக்கு சென்றால் அவர்கள் செல்லும் அதே ஊருக்கு வாகனம் இல்லாமல் தவிப்பவர்களை இணைக்கும் வகையில் செயல்படுகிறது.

இதுவும் ஒரு விதமான சட்ட விரோத செயல்பாடுதான். சொந்தமான வாகனம் வைத்திருப்பவர் மற்றொருவரை அவர்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று அதற்காக பணம் வாங்குவது என்பது கேப்ஸ் நடத்துவதற்கு சமமாகவே சட்டம் கருதும். இதுபோன்ற நடவடிக்கையில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

பெங்களூருவில் சமீப காலமாக பைக்குகளுக்கும் இது மாதிரியான ஆப்கள் செயல்படுகின்றன. நீங்கள் பைக்கில் தனியாக செல்கிறீர்கள் என்றால் நீங்கள் செல்லும் இடத்திற்கோ அல்லது செல்லும் வழியில் உள்ள இடத்திற்கு செல்ல வாகனம் இல்லாமல் இருக்கும் இன்னொருவரையோ உங்களுடன் இணைத்து வைக்கும் வேலையை அந்த பைக் நிறுவனங்கள் பார்க்கிறது.

பாலாவின் பார்வையில்
இது போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. நீங்கள் பயணிக்கும் போது விபத்துக்கள் நிகழ்ந்தாலோ அல்லது வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்காது.

மேலும் பயணத்தின் போது உங்களுக்கான இன்சூரன்ஸூம் இருக்காது. சில அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நீங்கள் செலுத்தும் தொகை உங்களுக்கான இன்சூரன்ஸிற்கும் சேர்த்து வசூலிக்கப்படும் தொகையாகும். ஆனால் இது போன்ற சட்ட விரோதமாக நடந்து வரும் நிறுவனங்களில் இது போன்ற வாய்ப்புகள் இல்லை.


Click it and Unblock the Notifications