பெட்ரோல் விலையை குறைக்க சீனா செய்த அதிரடி... மோடி அரசு இதை நிச்சயம் செய்யாது.. காரணம் இதுதான்
பெட்ரோல் விலையை குறைப்பதற்காக அதிரடியான நடவடிக்கை ஒன்றை சீனா எடுத்துள்ளது.
பெட்ரோல் விலையை குறைப்பதற்காக அதிரடியான நடவடிக்கை ஒன்றை சீனா எடுத்துள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு இதை செய்யுமா? என்பது கேள்விக்குறியே.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து ஓபெக் (Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் ஓபெக் கூட்டமைப்பின் கையே ஓங்கியுள்ளது.

கச்சா எண்ணெய்தான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருள். சில சமயங்களில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் உற்பத்தியை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள் குறைத்து விடுகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து விடுகிறது.

அதாவது செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு கச்சா எண்ணெய்யின் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குதான் இது அதிக பிரச்னையை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் உலகிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிக அதிக தொகையை செலவிடும் நாடுகளாக இந்தியா மற்றும் சீனா ஆகியவை உள்ளன. இதனால் இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதில், இந்தியா ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு தொகையை செலவிட்டால் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆவது?

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இத்தகைய வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை வெகுவாக குறைந்து, நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். இரண்டாவதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும்.

இதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை உண்டாக்கி வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.

எனவேதான் இந்தியா, சீனா ஆகியவை போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டுள்ளன. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவை காட்டிலும் சீனாதான் ஒரு படி மேலே உள்ளது என்ற உண்மையை மறுக்க முடியாது.

எதிர்காலத்தில் சீனா முழுவதும் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என அந்நாட்டு அரசு விரும்புகிறது. இதற்காக தற்போது அதிரடியான புதிய சட்டம் ஒன்றை சீனா அமலுக்கு கொண்டு வரவுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, சீனாவில் செயல்பட்டு வரும் கார் உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பிட்ட அளவு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரித்தே ஆக வேண்டும். 2019ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிக்காத கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அல்லது தொழிற்சாலையை அரசாங்கம் இழுத்து மூடி விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2025ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 70 லட்சம் எலெக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் கார்கள் விற்பனையாக வேண்டும் என சீனா இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காகதான் அங்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் 30,000க்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அப்படியானால் கிட்டத்தட்ட அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் இந்த சட்டத்தின் கீழ் வந்து விடும் என புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்தியாவில் இப்படி கடுமையான சட்ட திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. எனவேதான் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகன போட்டியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி விட்டு சீனா வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.
More from DriveSpark
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








