காங்கோ சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரம் தெரிந்தால் கார், செல்போன் மீது வெறுப்பு உண்டாகும்...
காங்கோ சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரம் தெரியவந்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள், செல்போன், லேப்டாப் மீது உங்களுக்கு வெறுப்பு உண்டாகலாம்.
காங்கோ சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரம் தெரிந்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள், செல்போன், லேப்டாப் மீது உங்களுக்கு வெறுப்பு உண்டாகலாம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டுள்ளது.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை உலகின் பல்வேறு நாடுகளும் குறைத்து கொண்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதும் கூட இதற்கு ஓர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக முன் வைக்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா என உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தும் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளன.

இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதன் காரணமாக காங்கோ நாட்டின் சின்னஞ்சிறு குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.

எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கோபால்ட் (Cobalt). எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர செல்போன், லேப்டாப் ஆகியவற்றின் பேட்டரிகளை உருவாக்குவதிலும், கோபால்ட் முக்கிய பங்காற்றுகிறது.

இப்படி பல்வேறு விதங்களில் பயன்பட்டு வரும் கோபால்ட், ஆப்ரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உலகின் கோபால்ட் தேவையை பூர்த்தி செய்வதில் காங்கோ நாடுதான் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் தேவையில் 50 சதவீதத்திற்கும் மேலான கோபால்ட்டை காங்கோதான் வழங்குகிறது. தற்போது கோபால்ட்டிற்கான தேவை அதிகரித்து வருவதால், காங்கோ சுறுசுறுப்படைந்துள்ளது. காங்கோ நாட்டில் உள்ள சுரங்கங்களில், கோபால்ட் எடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால், காங்கோ நாட்டில் உள்ள கோபால்ட் சுரங்கங்களில், பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதுதான். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வறுமை மற்றும் அறியாமை ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுரங்களில்தான் அதிகப்படியான குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காங்கோ நாட்டிற்கு சென்றிருந்த சில தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் வாயிலாக இந்த தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளன. காங்கோவில் உள்ள கோபால்ட் சுரங்கங்களில் குழந்தைகள் படும் துயரத்தை அவர்கள்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இத்தகையை குழந்தை தொழிலாளர்களை மீட்க, காங்கோ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் குழந்தை தொழிலாளர்களை மீட்க, காங்கோ அரசுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications