மொபைல்போனில் பேசியதால் வந்த வினை... ஷண நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!
கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசியதால் பெரும் விபரீதமான சம்பவம் பெங்களூரில் நடந்தது. அதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கார் ஓட்டும்போது ஏற்படும் சிறு கவனக்குறைவும், அதிவேகமும் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும் என்பது குறித்து நாம் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். அண்மையில் பெங்களூரில் நடந்த சம்பவமும் இதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது.

பெங்களூர் ஆனேகல் பகுதியில் உள்ள அலையன்ஸ் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பிரவீண் சக்ரவர்த்தி, பவீத் கோஹ்லி மற்றும் மாணவிகள் ஸ்ருதி கோபினாத் நாயர், அர்ஷியா குமார் மற்றும் ஹர்ஷா ஸ்ரீ வத்சவ் ஆகிய 5 பேரும் நண்பர்கள்.

கல்லூரி செல்வதற்காக ஸூம் கார் நிறுவனத்திடமிருந்து ஃபோர்டு ஃபிகோ காரை செல்ஃப் டிரைவிங் முறையில் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த காரில் 5 பேரும் நைஸ் ரோடு வழியாக தங்களது கல்லூரி நோக்கி சென்றுள்ளனர். காரை பிரவீண் ஓட்டி இருக்கிறார்.

காலை 7.30 மணியளவில் அவர்களது கார் பேகூர் கொப்பா பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பிரவீணுக்கு மொபைல்போனில் அழைப்பு வந்துள்ளது. காரை ஓட்டியபடியே, மொபைல்போனை எடுத்து பேச முயன்றுள்ளார்.

அப்போது கார் மிக அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், திடீரென கார் பிரவீணின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பல்டியடித்துள்ளது. கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் கார் உருண்டு சென்று சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். அந்த வழியில் சென்றவர்களும், நைஸ் ரோடு பணியாளர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரில் இருந்தவர்களை வெளியில் எடுத்துள்ளனர்.

இந்த விபத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவிகள் ஸ்ருதி கோபினாத் நாயர், அர்ஷியா குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனற். மற்றொரு மாணவி ஹர்ஷா ஸ்ரீ வத்சவ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காரை ஓட்டிய பிரவீண் மற்றும் அவரது நண்பர் பவீத் கோஹ்லி ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கு முதல் காரணமாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுவது காரை ஓட்டிய பிரவீண் மிக அதிவேகத்திலும், தாறுமாறாகவும் ஓட்டி இருக்கிறார்.

உடன் வந்தவர்கள் சொல்லியும் கேட்கவில்லை என்று தெரிகிறது. அத்துடன், காரை அதிவேகத்தில் ஓட்டியபோது மொபைல்போனில் பேசவும் முயன்றுள்ளார். இதனால், கவனக்குறைவு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டிய பிரவீணை கைது செய்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கிய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஸூம் உள்ளிட்ட செல்ஃப் டிரைவிங் கார் நிறுவனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். கார் செல்லும் வேகம் கண்காணிக்கப்பட்டு, எச்சரிக்கையும் கொடுக்கப்படும்.

இருப்பினும், இதுபோன்ற செல்ஃப் டிரைவிங் கார்களை ஓட்டுபவர்கள், பழக்கப்படாத காரை ஓட்டும்போது சிரமங்கள் இருப்பதும் விபத்துக்களுக்கு வழிகோலுகிறது.

பலர் அரைகுறையாக டிரைவிங் கற்றுக் கொண்டு இதுபோன்ற செல்ஃப் டிரைவிங் நிறுவனத்தில் காரை வாடகை எடுத்து விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








