எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு அனைத்து விதமான பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு அனைத்து விதமான பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டு வருகிறது.

இதனால் சாமானிய மற்றும் மிடில் க்ளாஸ் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டுள்ளது. இந்த 2 பிரச்னைகளுக்கும், எலக்ட்ரிக் வாகனங்கள்தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது.

எனவே இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், 2030ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் மயமாக வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இது மிகவும் கடினமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு மூச்சாக மேற்கொண்டு வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகம். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே எலக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படுகிறது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களை ஊக்குவிப்பதுடன், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியிலும், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஏனெனில் தற்போதைய நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.

இதன் காரணமாகவும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் தயக்கம் நிலவி வருகிறது. எனவேதான் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு பல்வேறு முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இன்று (செப்.6) வெளியாகியுள்ள ஓர் அறிவிப்பு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் கமர்ஷியல் வாகனங்களுக்கு (Commercial vehicles) பெர்மிட்கள் (Permits) தேவையில்லை என்பதுதான் அந்த அறிவிப்பு. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எனவே அனைத்து எலக்ட்ரிக் வாகனங்கள், நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் (Bio-Fuel) உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கும் கமர்ஷியல் வாகனங்களுக்கு அனைத்து விதமான கமர்ஷியல் பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

தேவையான அனைத்து வித பெர்மிட்களும் நீக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள் மற்றும் கேப்ஸ் உள்ளிட்ட டிராவல்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு இது நிச்சயமாக பெரிய பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் விற்பனையும் அதிகரிக்கும். சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM-Society of Indian Automobile Manufacturers) மாநாடு இன்று நடைபெற்றது.
Recommended Video


எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் கமர்ஷியல் வாகனங்களுக்கு, அனைத்து விதமான கமர்ஷியல் பெர்மிட்களில் இருந்தும் விலக்கு என்ற அறிவிப்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சியாம் மாநாட்டில்தான் வெளியிட்டார்.

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டுள்ளது. கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஓரு ஆண்டுக்கு மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடியை இந்தியா செலவிடுகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தால், இந்தியாவின் அந்நிய செலாவணி இழப்பு பெருமளவில் தடுக்கப்படும். இதன் காரணமாகவும், எலக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க மத்திய அரசு முயல்கிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பும் ஒரு காரணம் என்பதை மறுத்து விட முடியாது. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வெகு நாட்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக, மஹிந்திரா மராஸ்ஸோ கார், சமீபத்தில் லான்ச் செய்யப்பட்டது. அதன் போட்டோ ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications