தீயில் கருகி இன்ஜினியர் பலி.. வெளியேற முடியாதது ஏன் என தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்
ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதால், சாப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதால், சாப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரால் காரை விட்டு வெளியேற முடியாதது ஏன்? என்பது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் அம்பா பகுதியை சேர்ந்தவர் பவன். 45 வயதாகும் இவர், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பணி நிமித்தம் காரணமாக, தனது மனைவி மற்றும் மகனுடன், கிரேட்டர் நொய்டாவில்தான் பவன் வசித்து வந்தார். ஃபோர்டு ஐகான் கார் ஒன்றை பவன் வைத்துள்ளார். அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய நண்பரிடம் இருந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த காரை பவன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பவனுக்கு அலுவலகத்தில் நைட் ஷிப்ட் (Night Shift) பணி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி பணியை முடித்து விட்டு, நேற்று காலை (டிச.25) பவன் தனது ஃபோர்டு ஐகான் காரில் வழக்கம் போல வீடு திரும்பி கொண்டிருந்தார்.

முன்னதாக நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து மெசேஜ்களை அனுப்பி விட்டு, குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்கும் நோக்கில், பவன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆனால் டிபிஎஸ் சொசைட்டி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது துரதிருஷ்டவசமாக கார் திடீரென தீப்பிடித்தது. அப்போது மணி அதிகாலை 5.30 இருக்கும். சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு, அங்கு வாக்கிங் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கார் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.

காருக்குள் சிக்கி கொண்டிருந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பவனை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பவனின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது. கொளுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி, பவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

ஃபோர்டு ஐகான் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது ஏன்? என்பதற்கான காரணங்களை கண்டறிய, போலீசார் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஆனால் கார் தீப்பற்றிய உடனேயே, அதன் கதவுகள் லாக் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகதான் காரை நிறுத்தி விட்டு பவனால் உடனடியாக வெளியே வர முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியேற முடியாத வகையில் கதவுகள் லாக் ஆகி விட்டதால், காருக்கு உள்ளேயே சிக்கி பவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில், மற்றொரு சோகம் என்னவென்றால், கார் தீப்பிடித்து எரிந்த பகுதியில் இருந்து, வெறும் அரை கிலோ மீட்டர் தொலைவில்தான் பவனின் வீடு உள்ளது. உற்சாகமாக வீட்டை நெருங்கி கொண்டிருந்த சூழலில், எதிர்பாராத விதமாக பவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கார் வைத்திருப்பவர்கள் மத்தியில், குறிப்பாக ஃபோர்டு நிறுவன கார்கள் வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோர்டு நிறுவன கார்கள் வரிசையாக தீப்பற்றி எரிவதும், உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொள்வதுமே இதற்கு மிக முக்கியமான காரணம்.

குஜராத் மாநிலம் வதோதரா நகரை சேர்ந்த மிஹிர் பன்ச்சால் என்ற தொழிலதிபர் கடந்த சில வாரங்களுக்கு முன் இதே பாணியில் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வதோதரா நகரில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய மிஹிர் பன்ச்சால், ஃபோர்டு என்டேவர் கார் ஒன்றை வைத்திருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம்தான் இந்த ஃபோர்டு என்டேவர் காரை மிஹிர் பன்ச்சால் புதிதாக வாங்கியிருந்தார். இதன் விலை சுமார் 40 லட்ச ரூபாய். இந்த சூழலில் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி காலை 11 மணியளவில், தனது ஃபோர்டு என்டேவர் காரில், மிஹிர் பன்ச்சால் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் திடீரென தீப்பற்றியது. இதை உடனடியாக கவனித்து விட்ட மிஹிர் பன்ச்சால், ஒரு வழியாக போராடி, காரை சாலையோரமாக நிறுத்தினார். அவர் சாலையோரமாக நிறுத்திய நேரத்தில், காரில் தீ குபு குபுவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மிஹிர் பன்ச்சால், உடனடியாக காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக சீட் பெல்ட் ஜாம் ஆகி விட்டது. எனவே மிஹிர் பன்ச்சாலால் சீட் பெல்ட்டை கழற்றி விட்டு, காரை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதன் காரணமாக காருக்கு உள்ளேயே சிக்கி மிஹிர் பன்ச்சால் பரிதாபமாக உயிரிழந்தார். தீப்பற்றி எரிந்த காரில், சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால், தொழிலதிபர் ஒருவர் சிக்கி கொண்டு உயிரிழந்த உருக்கமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது முதல் முறையாக நடந்த விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், டாக்டர் சரனா ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று, கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அப்போது அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். ஆனால் அதன்பின் ஃபோர்டு என்டேவர் மற்றும் ஃபோர்டு ஐகான் கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில், மிஹிர் பன்ச்சால் மற்றும் பவன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனுடன் சேர்த்து, ஃபோர்டு நிறுவனத்தின் கார் ஒன்றில், விபத்தின் போது ஏர் பேக் விரிவடையாததால், அதில் பயணம் செய்த டாக்டர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவமும், ஃபோர்டு கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் கங்காதர் என்பவர், ஃபோர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்றை வைத்திருந்தார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிபுரா என்ற பகுதியில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, தனது ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரில், கங்காதர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக, மின் கம்பம் ஒன்றில் மோதி, கார் பயங்கரமான விபத்தில் சிக்கியது. இதில், டாக்டர் கங்காதர் படுகாயம் அடைந்தார். குறிப்பாக அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தின் போது ஏர் பேக்குகள் விரிவடையாததே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏர் பேக்குகள் விரிவடையாதது குறித்து, ஃபோர்டு நிறுவனத்திடம், டாக்டர் கங்காதரின் மனைவி ஷோபா கங்காதர் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நடந்த சம்பவங்களை எல்லாம் ஷோபா கங்காதர் பேஸ்புக்கில் வெளியிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அவரது பேஸ்புக் பதிவின் மூலம்தான் இந்த தகவல்கள் எல்லாம் தெரியவந்தது. இவ்வாறு ஃபோர்டு நிறுவன கார்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள சந்தேகம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் நிறைந்திருக்கும் என்பதால்தான், விலை உயர்ந்த கார்களை பலர் வாங்குகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட விலை உயர்ந்த கார்கள் கூட, சில சமயங்களில் பாதுகாப்பு வழங்க தவறி விடுகின்றன. மேற்கண்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. இதனால் கார்களில் பயணிக்கவே மனதில் ஒருவிதமான அச்சம் உருவாகி விடும் சூழல் தற்போது காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications








