பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக வித்தியாசமாக போராடிய பிரான்ஸ் மக்கள்.. இந்தியாவில் இதை செய்தால் என்ன
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதனால் விலையை குறைத்தே ஆக வேண்டிய சூழலுக்கு அந்நாட்டு அரசு தள்ளப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதனால் விலையை குறைத்தே ஆக வேண்டிய சூழலுக்கு அந்நாட்டு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு காரணம்.

இதுதவிர மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு காரணமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிக அதிகப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருந்தது. எனவே சாமானிய மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தியடைந்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீதுதான் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.

இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறது.

இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதும் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பிற்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது மிக கடுமையாக சரிவடைந்துள்ள நிலையில், இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதும் கூட மிக அதிகப்படியான விலையில்தான் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்றைய நிலவரப்படி (நவம்பர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் 82.23 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அங்கு ஒரு லிட்டர் டீசல் 74.97 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையும் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் ஆகியவை மிக அதிப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு எதிராக இந்தியாவில் யாரும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிரான மீம்ஸ்கள் மட்டுமே அதிகளவில் உலா வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் போராட முன் வராததும் மத்திய அரசின் அலட்சியத்திற்கு ஓர் காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்தியாவை போல் பிரான்ஸ் நாட்டிலும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீது அதிகப்படியான வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே பிரான்ஸ் நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலும் டீசல் கார்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு கடந்த 12 மாதங்களில் டீசல் விலை 23 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விலையை குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு செவி சாய்க்கவில்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வித்தியாசமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்படி தங்கள் கார்களை சாலைக்கு கொண்டு வந்து அப்படியே நிறுத்தி விட்டனர். அவர்கள் கார்களை மீண்டும் எடுக்காததால் சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்பட நாடு முழுவதும் சுமார் 2,000 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. அத்துடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

பிரான்ஸ் மக்களின் இந்த வித்தியாசமான போராட்டம் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது. நள்ளிரவிலும் கூட போராட்டம் நீடித்தது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகள் 'ப்ளாக்' செய்யப்பட்டு விட்டதால், பிரான்ஸ் அரசு ஸ்தம்பித்து போனது.

அத்துடன் இந்த போராட்டம் உலகின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் அரசு பொதுமக்கள் கூட்டத்தை கலைக்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை அனுப்பியது. அதுவரை அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் அதன்பின் வன்முறை வெடித்தது.

திடீரென கலவரம் ஏற்பட்டதால், போலீசார், ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். அத்துடன் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் 30 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

பிரான்ஸ் மக்களின் போராட்டம் தற்போது உலகம் முழுக்க விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான பிரான்ஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
More from DriveSpark
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா 42 மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








