மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலை ரூ.25 வரை குறைக்க முடியும்: ப.சி
மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடியும் வரை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நிறைவடைந்தவுடன் முதல் காரியமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதுவும் தினசரி கணிசமாக உயர்த்தப்பட்டதால், வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

அதில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், மத்திய அரசுக்கு ஆதாயம் எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் ரூ.15 வரையில் ஆதாயம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு லிட்டரிலும் கூடுதலாக ரூ.10 கலால் வரி விதிக்கப்படுகிறது.
இதனால், ஒவ்வொரு லிட்டரிலும் மத்திய அரசுக்கு ரூ.25 வரை ஆதாயம் கிடைத்து வருகிறது. டீசலிலும் இதே கதைதான். நியாயமாக இது மக்களுடைய பணம். பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும்.. ஆனால், மத்திய அரசு செய்யாது. வெறும் ரூ.1 அல்லது ரூ.2 வரை குறைத்து மக்களை ஏமாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வந்தால் விலைகள் குறையும் என்கிறார் மஹாராஷ்டிர முதலமைச்சர். அவருடைய கட்சியின் மத்திய அரசு இதனை செய்ய வேண்டும் என்று அவர் வற்புறுத்துவாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48 வரையிலும், டீசலுக்கு ரூ.15.33 வரையிலும் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. இதுதவிர, பெட்ரோல், டீசலுக்கு மாநிலங்கள் வாட் வரியை விதிக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

நம்மிடருந்து பெட்ரோல், டீசலை வாங்கும் நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளைவிடவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. இதனால், எல்லையோர மக்கள் அந்நாட்டுக்கு படை எடுத்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், விலைவாசியும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலையிலும் கணிசமாக உயர்வு காணப்படுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக முடிவு எடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரிம் கோரிக்கையாக உள்ளது.

ஒருவேளை பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.45 என்ற விலையிலும், டீசல் விலை ரூ.35 என்ற விலையிலும் விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும்.

"பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது. மாநிலத்தின் வரி வருவாயை பாதிக்கும்," என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை நிலவரத்தை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
டீசல் விலை நிலவரத்தை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








