இந்த பஸ் ஓட ஓட காற்று சுத்தமாகும்... பட்டாசு வெடிக்க தடை போட்ட ஜட்ஜ் அய்யா இத நோட் பண்ணுங்க...
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட்டிற்கு, காற்றை சுத்தப்படுத்தும் பசுமை பேருந்துகள் குறித்து தெரியுமா?
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட்டிற்கு, காற்றை சுத்தப்படுத்தும் பசுமை பேருந்துகள் குறித்து தெரியுமா?

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கூட சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன.

நாம் பாதுகாக்க வேண்டிய சுற்றுச்சூழலானது, பல்வேறு வழிகளில் மாசடைகிறது. சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுவதற்கு, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணமாக உள்ளன. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை உலக நாடுகள் பலவும் வெகு வேகமாக குறைத்து கொண்டு வருகின்றன. அதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ப்ளூ ஸ்டார் (Bluestar) என்ற நிறுவனம், அட்டகாசமான பசுமை பேருந்தை (Green Bus) அறிமுகம் செய்துள்ளது. இந்த பசுமை பேருந்து இயங்க இயங்க காற்று சுத்தம் அடையும் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

ப்ளூ ஸ்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பசுமை பேருந்தின் மேற்கூரையில் ஃபில்டர் (Filter) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. காற்றை மாசடைய செய்யும் கண்ணுக்கு தெரியாத மிக நுண்ணிய துகள்களை இந்த ஃபில்டர் அகற்றி விடும். இதன்மூலம் காற்று சுத்தமாகும்.

காற்றை சுத்தம் செய்யும் இந்த பணியானது, பேருந்து இயங்கி கொண்டிருக்கும் வேளையில் நடைபெறும். இதனிடையே கோ-அகெய்ட் (Go-Ahead) என்ற குழுமம், இங்கிலாந்து நாட்டில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்குவதில், பிரபலமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

காற்றை சுத்தம் செய்யும் பசுமை பேருந்தை அறிமுகம் செய்துள்ள ப்ளூ ஸ்டார் நிறுவனமானது, இந்த கோ-அகெய்ட் குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

ப்ளூ ஸ்டார் பசுமை பேருந்து குறித்து கோ-அகெய்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''ஒவ்வொருவரும் கார், டூவீலர் போன்ற தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்காமல், பேருந்து போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்தினால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

எனவே சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பேருந்துகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால் பேருந்துகள் காற்றை மாசுபடுத்துவதாக புகார்கள் உள்ளன. எனவே காற்றை சுத்தப்படுத்தும் வகையிலான பேருந்துகளை உருவாக்க விரும்பினோம்.

அதன் வெளிப்பாடுதான் இந்த பசுமை பேருந்து. தற்போது இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் இந்த பசுமை பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சவுத்தாம்ப்டன் நகரில் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் இந்த பேருந்து ஒரு தீர்வாக இருக்கும்.

ஏனெனில் சவுத்தாம்ப்டன் நகரின் சாலைகளில் இயங்கும்போது, இந்த பேருந்து காற்றையும் சுத்தப்படுத்தி கொண்டே இருக்கும். காற்றை சுத்தப்படுத்தும் ஃபில்டரானது, பேருந்தின் மேற்கூரையில்தான் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இதனால் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது.

காற்று மாசுபாடு காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது போன்ற பேருந்துகள் அதிகமாக பயன்பாட்டிற்கு வருகையில் காற்று சுத்தம் அடைந்து, உயிரிழப்புகள் கணிசமாக குறைக்கப்படும்'' என்றனர்.

இனி இந்தியாவிற்கு வருவோம். காற்று மாசுபாடு பிரச்னையால், இங்கிலாந்து நாட்டை காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ இந்தியாதான். இந்தியாவின் பல நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக வாழ தகுதியற்றவையாக மாறி வருகின்றன.

குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே தேசிய தலைநகர் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களை இயக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

டெல்லி, நொய்டா, மீரட், ரோஹ்டக் உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டை கட்டுபடுத்துவது தொடர்பான ஒரு வழக்கில்தான் இப்படியான ஒரு உத்தரவை சுப்ரீம் கோர்ட் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மேற்குறிப்பிட்ட கார்களை உடனடியாக பறிமுதல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனவே கார் உரிமையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். புகை பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு கார்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அபத்தமானது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இதுதவிர காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுபோன்ற உத்தரவுகளால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் மட்டுமே இந்தியாவில் எடுக்கப்படுகின்றன. ஆனால் ப்ளூ ஸ்டார் பசுமை பேருந்து போன்ற முயற்சிகள் இங்கு இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானதே. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டுமானால் இத்தகைய பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். தற்போது இயங்கி வரும் புகை வண்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும்.
ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications