ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா கார்களின் விலை உயர்கிறது... வரும் ஜனவரி மாதம் முதல் அமல்...
மாருதி சுஸுகி, டொயோட்டாவை தொடர்ந்து, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையும் உயர்கிறது.
மாருதி சுஸுகி, டொயோட்டாவை தொடர்ந்து, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையும் உயர்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்வு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, தனது அனைத்து கார்களின் விலையையும் வரும் ஜனவரி முதல் உயர்த்தவுள்ளதாக இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், விலையை உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.4.73 லட்சம் விலை கொண்ட ப்ரியோ ஹேட்ச்பேக் முதல், ரூ.43.21 லட்சம் விலை கொண்ட அக்கார்டு ஹைபிரிட் வரை பல்வேறு கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

அமேஸ் மற்றும் சிட்டி போன்ற பிரபலமான தயாரிப்புகளும் ஹோண்டா நிறுவனத்துடையது தான். ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பை ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை.

ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி செலவு 4 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. விலையை எவ்வளவு உயர்த்துவது? என்பது தொடர்பாக ஹோண்டா தற்போது பரிசீலித்து வருகிறது.

முன்னதாக நிஸான் இந்தியா, ஃபோர்டு இந்தியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை நேற்று (டிசம்பர் 13) வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி நிஸான் நிறுவன கார்களின் விலை 4 சதவீதம் வரையும், ஃபோர்டு நிறுவன கார்களின் விலை 2.5 சதவீதம் வரையும் உயர்த்தப்படுகிறது. அதே சமயம் டாடா நிறுவன பயணிகள் வாகனங்களின் விலை ரூ.40 ஆயிரம் வரை உயரவுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தை போன்று, நிஸான், ஃபோர்டு, டாடா நிறுவன வாகனங்களின் விலையும் வரும் ஜனவரி மாதம்தான் உயர்த்தப்படவுள்ளது. இந்த நிறுவனங்களுக்கெல்லாம் முன்னதாக மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர், இசுஸு உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து அறிவித்துள்ளன.

இதன்படி இசுஸு நிறுவன வாகனங்களின் விலை 1 லட்ச ரூபாய் வரையும், டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை சுமார் 4 சதவீதம் வரையும் உயர்த்தப்படுகிறது. இசுஸு, டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை உயர்வும் வரும் ஜனவரி மாதம்தான் அமலுக்கு வருகிறது.

ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, விலை உயர்வு எவ்வளவு? என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. ஹோண்டாவை போன்று மாருதி சுஸுகி நிறுவனமும், விலை உயர்வு எவ்வளவு என்பதை நிர்ணயிக்க ஆலோசித்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








