ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்... மாருதிக்கு செக் வைக்கிறது ஹோண்டா...
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு செக் வைக்கும் விதமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு செக் வைக்கும் விதமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து கொண்டுள்ளது.

இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் வேகன் ஆர் காரை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வேகன் ஆர் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வேகன் ஆர் காருக்கு 'செக்' வைக்க ஹோண்டா திட்டமிட்டு வரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், எலெக்ட்ரிக் வேகன் ஆர் காருக்கு போட்டியாக சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அனேகமாக ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் 2023ம் ஆண்டில் லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டீசல் கார் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம் மிக தாமதமாகதான் நுழைந்தது. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் அதே தவறை செய்ய வேண்டாம் என ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எனவே கூடிய விரைவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து விட வேண்டும் என ஹோண்டா நிறுவனம் விரும்புகிறது. ஆனால் 2023ம் ஆண்டு என்பதே தாமதம்தான் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் மஹிந்திரா, டாடா, மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன. அவர்களுடன் ஹோண்டா சற்று தாமதமாகதான் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிறிய எலெக்ட்ரிக் காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150-200 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.
2018 ஹோண்டா சிவிக் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications