இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் டிரைவர்லெஸ் கார்களுக்கு அனுமதி வழங்குகிறதா மோடி அரசு?
டிரைவர்லெஸ் கார்கள் (Driverless Cars) எனப்படும் ஓட்டுனர் இல்லா கார்கள் நமது உலகை எவ்வாறு மாற்றப்போகின்றன என்பது குறித்த சுவாரசியமான உண்மைகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
டிரைவர்லெஸ் கார்கள் (Driverless Cars) எனப்படும் ஓட்டுனர் இல்லா கார்கள் நமது உலகை எவ்வாறு மாற்றப்போகின்றன என்பது குறித்த சுவாரசியமான உண்மைகளை தொகுத்து வழங்கியுள்ளோம். அத்துடன் இந்தியாவில் டிரைவர்லெஸ் கார்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதா? என்ற கேள்விக்கும் இந்த கட்டுரையில் விடை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தற்போது டிரைவர்லெஸ் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டிரைவர்லெஸ் கார்களை பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளையும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளன.

எனவே வரும் 2021ம் ஆண்டு முதல், டிரைவர்லெஸ் கார்கள் சாலைகளை ஆட்சி செய்ய தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த டிரைவர்லெஸ் கார்கள், நமது உலகை கீழ்கண்ட வழிகளில் மாற்றம் செய்யப்போகின்றன.

டிரைவர்களின் வேலை பறிபோகும்
விவசாயம், வங்கி, தொழிற்சாலை என எந்த ஒரு துறையானாலும், ஆட்டோமேஷன் (Automation) என்பது பணியாளர்களின் வேலைக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுத்து கொண்டேதான் இருக்கிறது. இயந்திரமயமாதல் மூலமாக பணியாளர்கள் பலர் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர்.

போக்குவரத்து துறையிலும் அதே நிலைமைதான். சொல்லப்போனால் போக்குவரத்து துறையில் நிலைமை இன்னும் மோசமாகும். டிரைவர்லெஸ் கார்கள் வெகுவாக பயன்பாட்டிற்கு வருகையில், டிரைவர்கள் பலர் தங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழல் உருவாகும்.

ஆல்கஹால் நுகர்வு அதிகரிக்கும்
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கார் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மது போதையில் கார்களை இயக்குவதே இதற்கு முக்கிய காரணம். செல்ப்-டிரைவிங் கார்களை (Self-Driving Cars) பலர் மது போதையில்தான் இயக்குகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர். அதே சமயம் கார் ஓட்ட வேண்டும் என்பதற்காக பலர் மது அருந்துவதை தவிர்க்கின்றனர் என்பதையும் மறுத்து விட முடியாது. ஆனால் டிரைவர்லெஸ் கார்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வருகையில் இந்த பிரச்னை இருக்காது.

எனவே அவர்களும் துணிந்து மது அருந்த தொடங்குவார்கள். இதனால் மதுவுக்கான தேவை தற்போது உள்ளதை காட்டிலும் கணிசமாக அதிகரிக்கும். இதன் காரணமாக உலகம் முழுவதும் மது உற்பத்தி நிச்சயமாக உயரும் என்பது டிரைவர்லெஸ் கார்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

உடல் உறுப்பு தானம் குறையும்
அமெரிக்க அரசின் ஹெல்த் மற்றும் ஹ்யூமன் சர்வீசஸ் (Health & Human Services) புள்ளி விபரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி தற்போது 5ல் ஒரு பங்கு உடல் உறுப்புகள் தானமானது, சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் மூலமாகவே கிடைத்து கொண்டுள்ளது.

இந்த சூழலில் டிரைவர்லெஸ் கார்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் உறுப்புகள் தானத்தின் எண்ணிக்கையும் கணிசமாக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

டிரைவர்களுக்கு இடையே வீண் வாக்குவாதம் ஏற்படாது
சாலையில் அவசரமாக சென்று கொண்டிருக்கையில், பாதசாரிகள் யாரேனும் குறுக்கே வந்து விட்டால் கடும் வாக்குவாதங்கள் நிகழும். அதேபோல் ஒரு வாகனம் இன்னொரு வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக சற்றே மோதினாலும், அவ்விரு வாகனங்களின் டிரைவர்களுக்கு இடையே கடும் சண்டை மூளும்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்கள் ஆக்ரோஷமாக வாகனத்தை இயக்க தொடங்குகின்றனர். இதற்கும், விபத்துக்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை சமீபத்தில் வெளியான புள்ளி விபரம் ஒன்று உறுதி செய்கிறது.

சாலையில் இதர வாகன ஓட்டிகள் அல்லது பாதசாரிகளுடன் நிகழ்ந்த வாக்குவாதத்தின் காரணமாக உண்டான ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக வாகனத்தை செலுத்தும் டிரைவர்களால், 66 சதவீத விபத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஆனால் டிரைவர்லெஸ் கார்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வருகையில், இந்த பிரச்னையும் ஏற்படாது. ஒவ்வொரு டிரைவர்லெஸ் காரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையேயான வாக்குவாதம் குறைவதுடன், விபத்துக்களின் எண்ணிக்கையும் சரியும்.

மருத்துவ செலவு குறையும்
சாலை விபத்துக்களின் காரணமாக பலர் படுகாயம் அடைகின்றனர். அவர்களை குணப்படுத்த அதிக தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது. இங்கிலாந்து என்ற ஒரு நாட்டில் மட்டும் ஒரு ஆண்டுக்கு, சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்காக சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

ஆனால் டிரைவர்லெஸ் கார்களின் காரணமாக 2030ம் ஆண்டில், விபத்துக்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்து விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே விபத்தில் காயமடைந்தவர்களுக்காக செலவிடப்படும் தொகையில், சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சம் பிடிக்க முடியும்.

குழந்தைகள் தனியாக பயணிக்கலாம்
டிரைவர்லெஸ் கார்களில், பெரியவர்கள் இல்லாமல் குழந்தைகள் தனியாக பயணிப்பதற்கு இங்கிலாந்து அரசு சமீபத்தில் பச்சை கொடி காட்டியது. எனவே குழந்தைகளை ஒரு இடத்தில் இருந்து அழைத்து வர வேண்டும் என்றாலோ அல்லது ஒரு இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாலோ கண்டிப்பாக பெரியவர்கள் சென்றே ஆக வேண்டும் என்ற நிலை குறையும்.

ஆனால் டிரைவர்லெஸ் கார்களில் குழந்தைகளை தனியாக அனுப்ப 38 சதவீத பெற்றோர்கள் மட்டுமே சம்மதம் தெரிவிக்கின்றனர் என சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது. சுயமாக இயங்கும் ஒரு காரை நம்பி குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் மத்தியில் நிலவும் தயக்கம் போக நீண்ட காலம் பிடிக்கும்.

இந்தியாவில் அனுமதி?
உலகின் பல்வேறு நாடுகளில் 2021ம் ஆண்டு முதல் டிரைவர்லெஸ் கார்களின் ஆதிக்கம் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிக அளவிலான டிரைவர்லெஸ் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து விடும் என்பதால், இந்தியாவில் டிரைவர்லெஸ் கார்களுக்கு அனுமதி வழங்குவது என்றே பேச்சுக்கே இடமில்லை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார்.

எனினும் வருங்காலத்தில் மத்திய அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் டிரைவர்லெஸ் கார்களினால், டிரைவர்களுக்கான வேலை வாய்ப்பு குறையும் என்றாலும், விபத்துக்களின் எண்ணிக்கை சரியும் என்பதையும் மறுத்து விட முடியாது.

டிரைவர்லெஸ் கார்களில் ஏராளமான நன்மைகள் இருக்கவே செய்கின்றன. எனவே தகுந்த வல்லுனர்களை கொண்டு, டிரைவர்லெஸ் கார்களின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து, தீர்க்கமான ஓர் முடிவை மத்திய அரசு எடுப்பதே சிறந்தது.
More from DriveSpark
மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








