சென்னை பிளாண்ட்டில் பலே திட்டம்! எலக்ட்ரிக் எஸ்யூவி உள்பட 8 கார்களை களமிறக்கும் ஹூண்டாய்...
இந்தியாவில் 1 கோடி கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதற்காக, சென்னை பிளாண்ட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 1 கோடி கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதற்காக, சென்னை பிளாண்ட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி உள்பட 8 கார்களை இந்திய மார்க்கெட்டில் களமிறக்குகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

தென் கொரிய தலைநகர் சியோலை தலைமையிடமாக கொண்டு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), தமிழகத்தின் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மொத்தம் 80 லட்சம் கார்களை விற்பனை செய்து, ஹூண்டாய் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அளவை அதிகரிக்க வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் விரும்புகிறது.

அதாவது 80 லட்சம் கார்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை, 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள், 1 கோடியாக உயர்த்த வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இன்னும் 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய வேண்டும்.

எனவே 2018 முதல் 2020ம் ஆண்டிற்குள் 8 புதிய தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்த 8 கார்களில் ஒன்று மட்டும் எலக்ட்ரிக் எஸ்யூவி வகை காராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் 2வது பாதியில், ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி வகை கார், இந்தியாவின் 15 நகரங்களில் லான்ச் செய்யப்படும்.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஒய்.கே.கோ கூறுகையில், ''2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 8 கார்களை லான்ச் செய்வோம். அதில் ஒன்று எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இருக்கும்'' என்றார்.

இதனிடையே ஹூண்டாய் நிறுவனத்திற்கு சென்னையில் பிளாண்ட் உள்ளது. அந்த பிளாண்ட்டில் மிக நீண்ட கால அடிப்படையில், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யவும் ஹூண்டாய் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் இந்தியாவின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்தே இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் கருதுகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, FAME திட்டத்தின் கீழ், தனியார் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானிய உதவி திட்டத்தை தொடர்வது உள்ளிட்ட விஷயங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் விரும்புகிறது.

ஏனெனில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கான சலுகையை ரத்து செய்து விடலாமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதனால்தான் மானிய உதவி திட்டம் தொடர வேண்டும் என ஹூண்டாய் விரும்புகிறது. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கும். எனவே மானியம் கிடைத்தால்தான் அதன் விலை சற்று குறையும். அப்போதுதான் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் விரும்புவார்கள்.

இதுதவிர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் அரசு உதவி செய்ய வேண்டும் என ஹூண்டாய் வலியுறுத்தியுள்ளது. ஆனால் தங்கள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் லான்ச் ஆகும்போது, ''ஹோம் சார்ஜிங் கிட்'' வழங்கப்படும் என ஹூண்டாய் கூறியுள்ளது.

சென்னையில் உள்ள பிளாண்ட்டில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது ஒரு ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் வரும் ஜனவரி மாதம் முதல் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

அதாவது சென்னை பிளாண்ட்டில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 7.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய ஹூண்டாய் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஒய்.கே.கோ இந்த தகவல்களை எல்லாம் வெளியிட்டுள்ளார்.

2018 முதல் 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஹூண்டாய் லான்ச் செய்யவுள்ள 8 கார்களில், 2 கார்கள் புதிய செக்மெண்ட்களாக இருக்கும். 5 கார்கள் மாடல் மாற்றப்பட்டதாக இருக்கும். எஞ்சிய ஒரு கார்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி.

இதனிடையே ஹூண்டாய் நிறுவனத்தின் பிராந்திய தலைமையங்களில் ஒன்றாக, வரும் ஜுலை 2ம் தேதி முதல் இந்தியா உருவெடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications