ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!
ஹூண்டாய் ஐ30 கார் சென்னை அருகே வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது.
ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் கார் சென்னை அருகே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் ஐ10, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 ஆகிய கார்களைவிட விலை உயர்வான ஹேட்ச்பேக் மாடல் ஹூண்டாய் ஐ30. ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் விலை அடிப்படையில் இந்திய மார்க்கெட்டிற்கு சரிபடாது கருத்து நிலவுகிறது.

இந்த சூழலில், இந்தியாவின் கார் மார்க்கெட் பக்குவப்பட்ட நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதையடுத்து, பிரிமியம் அம்சங்களுடன் கூடிய கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனை மனதில் வைத்து தனது ஐ30 காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஹூண்டாய் ஆராய்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆம். தனது ஐ30 காரை இந்திய சாலைகளில் வைத்து தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். ஹூண்டாய் எலான்ட்ரா செடான் காரின் ஹேட்ச்பேக் மாடலான ஐ30 கார் மிகவும் பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது.

பொதுவாக ஹேட்ச்பேக் கார்கள் 4 மீட்டர்கள் நீளத்திற்குள் இருக்கும். ஆனால்,இந்த ஹூண்டாய் ஐ30 காரின் நீளம் 4 மீட்டரை தாண்டுகிறது. மிட்சைஸ் எஸ்யூவிகளுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை பெற்றிருக்கிறது.

மிகவும் தாராள இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஐ30 காரில் ரேடார் அடிப்படையில் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் என்று பிரிமியம் வசதிகளை அளிக்கிறது.

நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் ஐ30 கார் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் என்பது அதில் பொருத்தப்பட்டு இருக்கும் அடையாள பட்டை மூலமாக தெரிய வந்துள்ளது.

இந்த புதிய ஐ30 கார் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு மேலான விலையிலும், அம்சங்களிலும் நிலைநிறுத்தப்படும். எனினும், இந்த கார் உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இல்லை என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக உள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








