இதுக்கு பேருதான் ஈயடிச்சான் காப்பியா? மாருதி சுஸூகியை அப்படியே பின்பற்றும் ஹூண்டாய்..
மாருதி சுஸூகி நெக்ஸா பாணியிலான பிரீமியம் டீலர்ஷிப்களை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸூகி நெக்ஸா பாணியிலான பிரீமியம் டீலர்ஷிப்களை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகதான், மாருதி சுஸூகி நிறுவனம், பிரீமியம் ஆட்டோ மார்க்கெட்டில் நுழைந்தது. ஆல் நியூ எஸ் க்ராஸ், புதிய சியாஸ், பலினோ ஆர்எஸ், பலினோ, இக்னிஸ் உள்ளிட்ட கார்களை, நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகதான், மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் இதர கார்கள், சாதாரண ஷோரூம்கள் மூலம்H விற்பனை செய்யப்படுகிறது. கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை கொடுக்க வேண்டும், பிராண்ட் இமேஜை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகதான், நெக்ஸா ஷோரூம்கள் திறக்கப்பட்டன.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் அதே பாணியை கடைபிடிக்க ஹூண்டாய் நிறுவனமும் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நெக்ஸா போன்று, பிரீமியம் டீலர்ஷிப்களை திறக்க ஹூண்டாய் நிறுவனமும் திட்டமிட்டு கொண்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் லான்ச் செய்யவுள்ள டக்ஸான் ஃபேஸ்லிப்ட், எலாண்ட்ரா ஃபேஸ்லிப்ட், கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட கார்களை, இந்த பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளடைவில், மேலும் பல கார்களையும், பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு என தற்போது நாடு முழுவதும், வழக்கமான டீலர்கள் பலர் உள்ளனர். பிரீமியம் டீலர்ஷிப்கள் அமைக்க, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

பிரீமியம் டீலர்ஷிப்களை அமைப்பதற்கான பணிகளை, ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வெகு விரைவில் ஹூண்டாய் பிரீமியம் டீலர்ஷிப்களை நாம் எதிர்பார்க்கலாம்.

ஒரு சில குறிப்பிட்ட மாடல்களை மட்டும் விற்பனை செய்வதற்காக, பிரீமியம் டீலர்ஷிப்களை அமைக்கும், மூன்றாவது கார் நிறுவனமாக ஹூண்டாய் இருக்க போகிறது. ஏனெனில் மாருதி சுஸூகி நிறுவனம் தனது பிரீமியம் மாடல் கார்களை மட்டும் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.

நெக்ஸா போன்ற பிரீமியம் டீலர்ஷிப்களை திறப்பது தொடர்பான அறிவிப்பை மஹிந்திரா நிறுவனமும் சமீபத்தில் வெளியிட்டது. அதாவது 'ப்ரைம்' என்ற பிரத்யேகமான டீலர்ஷிப் மூலம், விலை உயர்ந்த எஸ்யூவி கார்களை மட்டும் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இந்த வகையில் பார்த்தால், குறிப்பிட்ட சில மாடல்களை மட்டும் விற்பனை செய்வதற்காக, பிரத்யேகமான டீலர்ஷிப்பை அமைக்கும் மூன்றாவது கார் நிறுவனம் ஹூண்டாய். 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட கார்களை, பிரீமியம் டீலர்ஷிப்களில் விற்பனை செய்ய ஹூண்டாய் முடிவெடுத்துள்ளது.

எனவே ஒரு காருக்கு 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட தயாராக உள்ள வாடிக்கையாளர்களுக்கு, பிரீமியம் டீலர்ஷிப்களில், மேம்பட்ட அனுபவம் கிடைக்கும். இது தொடர்பான கூடுதல் தகவல்கள், வரும் மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications