ரூ.7,000 கோடியில் சென்னை ஆலையை விரிவாக்கம் செய்யும் ஹூண்டாய்!
ரூ.7,000 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய மின்சார கார் உற்பத்தி ஆலையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. மின்சார கார்களுக்கான உதிரிபாகங்களை இறக்குமதி செய்து சென்னை ஆலையில் அசெம்பிள் செய்ய ஹூ
ரூ.7,000 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய மின்சார கார் உற்பத்தி ஆலையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்தநிலையில், மின்சார கார்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைய அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, தமிழக முதல்வர் பழனிச்சாமியை ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் கூ மற்றும் துணைத் தலைவர் தத்தா ஆகியோரே நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஹூண்டாய் துணைத் தலைவர் தத்தா கூறுகையில்," சென்னையிலுள்ள கார் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், மின்சார கார் உற்பத்தி பிரிவு அமைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புதிய ஆலையின் மூலமாக 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே புதிய மின்சார கார் தொழிற்சாலையும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பின்னர், ஆலை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

சென்னை கார் ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 1,00,000 யூனிட்டுகள் அதிகரிக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இதில், 50,000 கார்கள் வெளிநாடுகளில் இருந்து முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கு அசெம்பிள் செய்யும் பணிகள் செய்யப்படும்.

இதன்படி, மின்சார கார்களுக்கான உதிரிபாகங்களை இறக்குமதி செய்து சென்னை ஆலையில் அசெம்பிள் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய கோனா மின்சார கார் முதலில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர் இந்த காருக்கான முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்து சென்னை ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications