காய்கறி, இறைச்சி கழிவு மூலம் பஸ்களுக்கு எரிபொருள்... மக்கள் வரிப்பணம் மிச்சம்...!!!
காய்கறி, இறைச்சியில் இருந்து அரசு பஸ்களுக்கு எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பேணி காக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணம் மிச்சம் பிடிக்கப்படும்.
காய்கறி, இறைச்சியில் இருந்து அரசு பஸ்களுக்கு எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பேணி காக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணம் மிச்சம் பிடிக்கப்படும். இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களால் சுற்றுச்சூழல் மிக மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. நாம் யூகித்து கூட பார்க்க முடியாத அளவிற்கு, சுற்றுச்சூழலின் நிலைமை மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது.

எனவே சிஎன்ஜி (CNG)எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு உள்ளிட்ட மாற்று எரிபொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட வேக வேகமாக அதிகரித்து கொண்ட செல்கிறது.

ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களும், சிஎன்ஜி-யில் இயங்கக்கூடிய கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால் சிஎன்ஜி-க்கு மாறுவது தொடர்பான விழிப்புணர்வை, பொதுமக்களிடம் பெரிய அளவில் அரசுகள் ஏற்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், வழக்கமான சிஎன்ஜி-யையும் கடந்து, காய்கறி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பயோ சிஎன்ஜி (உயிரி சிஎன்ஜி) மூலம் அரசு பஸ்களை இயக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அது நமது தமிழ்நாட்டில் அல்ல. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில்...!!!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டிற்கான பட்டியல், கடந்த வாரம் வெளியானது. இதில், இந்தூர்தான் முதலிடத்தை பிடித்தது.

தூய்மையான நகரங்களின் பட்டியலில், தொடர்ச்சியாக 2வது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது இந்தூர். ஆம், முந்தைய ஆண்டும் கூட இந்தூருக்கே முதலிடம். அங்கு காய்கறி கழிவுகளை கூட தேக்கம் அடைய விடாமல், மிக சிறப்பாக மறுசுழற்சி செய்து வருகின்றனர்.

இந்தூர் நகரில் உள்ள தேவி அலியாபாய் ஹோல்கர் பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் மிகவும் புகழ்பெற்றது. அங்குதான் காய்கறிகள் மூலம் பயோ சிஎன்ஜி தயாரிக்கும் பிளாண்ட் நிறுவப்பட்டுள்ளது. இங்கு 20 டன் காய்கறி கழிவுகளை, 1,000 கிலோ பயோ சிஎன்ஜி ஆக மாற்ற முடியும்.

இந்த பயோ சிஎன்ஜி எனப்படும் பயோ எரிபொருளைதான் (bio fuel) அரசு பஸ்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக பயோ சிஎன்ஜி-யை பயன்படுத்தி, ஆட்டோ ரிக்ஸாக்களை இயக்கி, சோதனை ஓட்டங்கள் எல்லாம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.

சோதனை ஓட்டங்களின் முடிவுகள் நல்ல விதத்தில் வந்தால், முதற்கட்டமாக 20 பஸ்களில் பயோ சிஎன்ஜி-யை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் எல்லாம் தற்போது வரை வழக்கமான சிஎன்ஜி மூலம் இயங்கி வருகின்றன.

அதாவது வழக்கமான சிஎன்ஜி-யை காட்டிலும், பயோ சிஎன்ஜி-யின் விலை ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் குறைவாக இருக்கும். இதனால் 1,000 கிலோ பயோ சிஎன்ஜியை பயன்படுத்தினால், இந்த பஸ்களில் 5,000 ரூபாய் மிச்சம் பிடிக்க முடியும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு மாதத்திற்கு 1.5 லட்ச ரூபாய் செலவு குறையும்.

தூய்மை இந்தியா திட்டத்திற்கான இந்தூர் மாநகராட்சியின் ஆலோசகராக ஆஷாத் வர்ஸி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான குழுதான் இந்த திட்டங்களை எல்லாம் தீட்டி செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

காய்கறிகளில் இருந்து பயோ சிஎன்ஜி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளில் இருந்தும் பயோ சிஎன்ஜி தயாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக மேலும் 2 பிளாண்ட்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் 4,000 கிலோ பயோ சிஎன்ஜி-யை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் 70 பஸ்களில், உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படும்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், சாலைகளில் செல்லும் அரசு பஸ்கள், கொடிய விஷமான கரும்புகையை அதிக அளவில் கக்குகின்றன. அப்படிப்பட்ட பஸ்கள் கடந்து சென்ற இடங்கள் எல்லாம், ஏதோ போர்க்களத்தில் குண்டு விழுந்த இடங்கள் போல், புகைமூட்டமாக மாறி விடுகின்றன.

அத்தகைய சூழ்நிலையில், இந்தூர் நகரம் வழக்கமான சிஎன்ஜி-யையும் கடந்து பயோ சிஎன்ஜி சோதனை ஓட்டம் வரை சென்றிருப்பது பாராட்டை பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களின் உடல் நலனையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். அதுமட்டுமில்லாமல், பெட்ரோல், டீசலுக்காக செலவிடப்படும் மக்களின் பல லட்சக்கணக்கான ரூபாய் வரிப்பணமும் மிச்சம் பிடிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








