7 ஆண்டுகளில் இல்லாத விபரீதம் அரங்கேறியது.. மோடி அரசின் அலட்சியத்தால் ரூ.100ஐ கடக்கிறது பெட்ரோல் விலை
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத விபரீதம் ஒன்று அரங்கேறியுள்ளது. மத்திய அரசின் அலட்சியம் காரணமாக அரங்கேறியுள்ள இந்த விபரீதத்தால், பெட்ரோல் விலை 100 ரூபாயை கடப்பதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத விபரீதம் ஒன்று அரங்கேறியுள்ளது. மத்திய அரசின் அலட்சியம் காரணமாக அரங்கேறியுள்ள இந்த விபரீதத்தால், பெட்ரோல் விலை 100 ரூபாயை கடப்பதற்கான வாய்ப்பு உண்டாகியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள்.

இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகள் காரணமாகவும், அவற்றின் விலை புதிய உச்சங்களை தொட்டு வந்தது. எனவே வரிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இதனால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், ஒரே ஒரு வரி மட்டுமே என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கொண்டே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே மேற்கண்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுக்கு வந்த உடனேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சூழலில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

இந்தியாவிடம் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் வளம் இல்லை. எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
Recommended Video


மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது மிகப்பெரிய நாடான இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

ஆம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைகிறது.

அத்துடன் தேவை அதிகரிக்க அதிகரிக்க தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் உயர்வடைந்து விடுகிறது. எந்த ஒரு பொருள் என்றாலும் தேவை அதிகரித்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்வடைவது என்பது வழக்கமான நடக்ககூடிய ஒரு விஷயம்தான்.

இந்த வகையில் தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 21.02 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா (Million Tonne) இறக்குமதி செய்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10.5 சதவீதம் அதிகமாகும். அத்துடன் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருப்பதும் இதுவே முதல் முறை.

அதாவது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது அதிகரித்துள்ளது. மத்திய அரசின் எரிபொருள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு என்பது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிகப்படியான தொகை செலவிடப்படுவதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

அத்துடன் தேவை அதிகரிப்பின் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயரும். எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தே ஆக வேண்டும்.

அமெரிக்கா, சீனா என உலகின் பல்வேறு நாடுகளும் இந்த பிரச்னையை எதிர்கொண்டுதான் வருகின்றன. ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எல்லாம் அந்த நாடுகள் வெகு வேகமாக எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன் எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.

இதனால் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் இறக்குமதி வெகுவாக குறையும். இந்தியாவிலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா, சீனா அளவிற்கு துரிதம் அடையவில்லை என்பதே உண்மை.

தற்போதைய நிலையில் இந்தியாவில் ஒருவர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்பினாலும் கூட, அதனை செய்ய முடியாத நிலைதான் நிலவி வருகிறது. ஏனென்றால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இங்கு இன்னும் போதிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களையே வாங்கி கொண்டிருக்கின்றனர். இதனால்தான் தேவை உயர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருகிறது.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கவே செய்யும்.

முன்னதாக ஈரானுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியது. இதனால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4ம் தேதியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

எங்களின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. ஆனால் இதில் இருந்து இந்தியா உள்பட மொத்தம் 8 நாடுகள் விலக்கு பெற்றன.

இருந்தபோதும் ஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அக்டோபர் மாதத்தில், சுமார் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








