இந்த 2 காரணங்களால் மீண்டும் உயரப்போகிறது பெட்ரோல் விலை... காலண்டரில் தேதியை குறித்து கொள்ளுங்கள்
இந்த இரண்டு காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரப்போகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த இரண்டு காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரப்போகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்கள்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான உடனடி நடவடிக்கைகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்கவே இல்லை. எனவே மத்திய அரசு மீது நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.

இந்த சூழலில் பொதுமக்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் ஓர் பெரிய அதிசயம் நிகழ்ந்து கொண்டுள்ளது. ஆம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கொண்டே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஏனெனில் கடந்த மே மாதம் கர்நாடக சட்டசபை தேர்தல் சமயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவே இல்லை.

ஆனால் தேர்தல் முடிந்ததுதான் தாமதம். உடனடியாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர தொடங்கியது. இதன்பின்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சங்களை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பொது மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. எனவே 5 மாநில தேர்தலுக்கு பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற கடுமையான அச்சம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவி கொண்டுள்ளது.

அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்யும் வகையிலான புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆம், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி என இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவை அதிகரித்து கொண்டிருப்பதை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன.

மத்திய அரசின் எரிபொருள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு துறையானது (Petroleum Planning and Analysis Cell-PPAC) இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு 17.3 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு 17.99 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வானது சுமார் 4 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து வந்தது. எனவே வாகனங்கள் பயன்படுத்துவதை மக்கள் குறைத்து கொள்ள தொடங்கினர். இதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் நுகர்வு கணிசமாக குறைந்தது.

அதாவது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வானது 0.3 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்து, 16.5 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. அதன்பின் வந்த செப்டம்பர் மாதத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அதிகப்படியான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டன.

அப்போதும் கூட இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு வெறும் சுமார் 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே அதிகரித்து, 16.51 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தின் 2வது வாரத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வானது 4 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் பெட்ரோல் மற்றும் டீசலின் பங்கே மிகப்பெரியதாக உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் பெட்ரோல் தேவை 4.6 சதவீதம் அதிகரித்து, 2.33 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் டீசல் தேவையானது 6.7 சதவீதம் அதிகரித்து, 6.98 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரித்து வருவதால், இனி தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதே சமயத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே (டிசம்பர் 7ம் தேதி தேர்தல் முடிவடைகிறது) மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சர்வதேச சந்தையில் சமீப காலமாக கச்சா எண்ணெய்யின் விலை பெரிய அளவில் குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு வருவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம் என்பதை மறுத்து விட முடியாது.

ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதே உண்மை. அதற்கு மாறாக சிறிய அளவிலான விலை குறைப்பு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (நவம்பர் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் 80.07 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 76.02 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.
More from DriveSpark
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








