இப்படி ஒரு வழி இருந்தும் பெட்ரோல் விலையை குறைக்காத மோடி அரசு... சாதித்து காட்டிய இந்தோனேஷியா...
இந்தியா மிக நீண்ட காலமாக பரிசீலனை அளவிலேயே வைத்துள்ள ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது இந்தோனேஷியா.
இந்தியா மிக நீண்ட காலமாக பரிசீலனை அளவிலேயே வைத்துள்ள ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது இந்தோனேஷியா.

சவுதி அரேபியா, குவைத், ஈரான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள்தான், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து ஓபெக் (OPEC) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான (Organization of the Petroleum Exporting Countries) ஓபெக்கில், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை நிர்ணயம் செய்வதில் ஓபெக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.

இந்த சூழலில் சமீப காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஓபெக் கூட்டமைப்பிடம் வலியுறுத்தி வருகின்றன.

ஓபெக் கூட்டமைப்பானது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால், அதன் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதனை செய்ய ஓபெக் மறுத்து வருகிறது. எனவே சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகப்படியான விலையிலேயே கச்சா எண்ணெய் விற்பனையாகி கொண்டுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த பிரச்னை உள்ளது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைத்து, தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிக அதிகப்படியான தொகையை செலவிட்டு வரும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தோனேஷியாவும் தீவிரமாக முயன்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் டீசலில், 20 சதவீத உயிரி எரிபொருள் (Biofuel) கலக்கப்பட வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உயிரி எரிபொருள் இந்தோனேஷியாவிலேயே தயாரிக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

இதற்கு பி20 பயோடீசல் (B20 Biodiesel) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பி20 பயோ டீசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு, கடந்த செப்டம்பர் மாதம் முதலே, இந்தோனேஷியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு விட்டது.

இதன்மூலமாக தொடக்கத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஓரளவிற்கும், வருங்காலங்களில் வெகுவாகவும் குறைத்து விட முடியும் என்று இந்தோனேஷியா நம்புகிறது. இதுதவிர டீசலின் விலையும் குறையும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

இந்தியாவும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவி வருகிறது. எனவே பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவது என்பதெல்லாம் தற்போதைக்கு நடக்காது.

அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தோனேஷியா போன்று உடனடியாக ஏதாவது ஒரு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்தே ஆக வேண்டிய கட்டாய சூழல் நிலவி வருகிறது.

முன்னதாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 10 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்யலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனால் இந்தியாவில் தற்போது விற்பனையாகி கொண்டுள்ள பெட்ரோலில் 10 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் கிடைக்கும் மொலாசஸ் என்ற துணைப்பொருளில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதே எத்தனால்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளாக கருதப்படும் எத்தனால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. அத்துடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் நமது நாட்டின் விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலுடன் தற்போது 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டு வரும் நிலையில், 15 சதவீத மெத்தனாலை கலப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை போன்று மெத்தனாலும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததுதான். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எத்தனாலை காட்டிலும் மெத்தனால்தான் இந்தியாவிற்கு மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு லிட்டர் எத்தனாலின் விலை சுமார் 45 ரூபாய். ஆனால் ஒரு லிட்டர் மெத்தனாலின் விலையோ 20 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே பெட்ரோலுடன் 15 சதவீத மெத்தனால் கலக்கப்பட்டால், இந்தியாவில் பெட்ரோல் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் படிப்படியாக கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைத்து விடலாம். இதுதவிர சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படும்.

மெத்தனால் என்பது நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். 15 சதவீத மெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் வாகனங்கள் இயங்க வேண்டுமானால், அதன் இன்ஜின்களில் மிக சிறிய அளவிலான மாற்றங்களை மட்டும் செய்தாலே போதுமானது.

இவ்வளவு நன்மைகள் இருந்தும் கூட இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மிக நீண்ட காலமாக இத்திட்டம் வெறும் பரிசீலனை அளவில் மட்டுமே உள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைய வாய்ப்பு உள்ளது.

இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான வரிகளை குறைப்பதன் மூலமாவோ அல்லது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலமாகவோ அவற்றின் விலையை பெருமளவில் குறைக்க முடியும்.

ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாமானிய மக்கள்தான்.
மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications