இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளுக்கு மட்டும் விலக்கு அளித்த முதல்வர்... கோர்ட் மீது திடீர் பாசம்...
முதல்வர் பிறப்பித்த ஓர் உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதர அரசு அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
முதல்வர் பிறப்பித்த ஓர் உத்தரவில் இருந்து நீதிபதிகளுக்கு மட்டும் திடீரென விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதர அரசு அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

டெல்லி மாநில அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சார்பில் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள், அந்த கார்களை எல்லாம் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.

ஒரு சில அதிகாரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை பயன்படுத்தி வந்தனர். வேறு சில அதிகாரிகள், அரசு கார்களை தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். எனவே இது தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமே நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசாங்க கார்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன் அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க தொடங்கினார்.

இதன் ஒரு பகுதியாக அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ கார்களில் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டது. அரசு அதிகாரிகளின் கார்கள் எங்கெல்லாம் செல்கின்றன? என்பதை கண்காணிப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை, மனித உரிமைகள் கமிட்டி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், இந்த உத்தரவில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டனர். ஆனால் அவர்களுக்கு விலக்கு அளிக்க டெல்லி மாநில அரசு மறுத்து விட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை, மனித உரிமைகள் கமிட்டி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''எங்கள் பணியின் இயல்பே ரகசியம்தான். நாங்கள் எங்கு செல்கிறோம்? என்பது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது.

எனவேதான் எங்கள் அதிகாரப்பூர்வ கார்களில் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் மாநில அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது'' என்றனர்.

இதுகுறித்து டெல்லி மாநில அரசின் உயரதிகாரிகள் கூறுகையில், ''ஜிபிஎஸ் டிவைஸ் மூலமாக டிராக்கிங் செய்யப்படும் தகவல்கள் யாருடைய பொது பார்வைக்கும் வராது. பொது நிர்வாக துறையின் தலைவர் மற்றும் அந்தந்த துறை தலைவர்களால் மட்டுமே அந்த தகவல்களை பார்க்கவும், கையாளவும் முடியும்.

எனவேதான் மேற்கண்ட துறைகளின் அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அரசாங்கம் வழங்கிய அதிகாரப்பூர்வ கார்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுத்தேயாக வேண்டும். இதனால் மற்ற துறைகளை போல் அவர்களும் கட்டாயமாக இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.

இது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவு'' என்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ கார்களில் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்த வேண்டும் என்ற உத்தரவில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி மாநில அரசின் உயரதிகாரிகள் கூறுகையில், ''நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் டெல்லி ஐகோர்ட்டினுடைய நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றனர். எனவே அவர்களது இயக்கங்களை டெல்லி மாநில அரசால் டிராக் செய்ய முடியாது'' என்றனர்.

ஆனால் விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தியும் கூட விலக்கு கிடைக்காததால், லஞ்ச ஒழிப்பு துறை, மனித உரிமைகள் கமிட்டி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''நீதிமன்றங்களுக்கு மட்டும் அரசு விலக்கு அளிக்கிறது. இந்த திடீர் பாசத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை'' என்றனர்.
More from DriveSpark
ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








