கெத்தாக இந்தியா வருகிறது புதிய கியா ரியோ.. ஐ20, பலினோ, ஜாஸ் கார்களுக்கு கடும் போட்டி உறுதி..
கியா நிறுவனத்தின் புதிய ரியோ கார் இந்தியாவில் லான்ச் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐ20, மாருதி சுஸூகி பலினோ, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு இது கடும் சவாலை அளிக்கும்.
கியா நிறுவனத்தின் புதிய ரியோ கார் இந்தியாவில் லான்ச் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐ20, மாருதி சுஸூகி பலினோ, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு இது கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென் கொரிய நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் கியா மோட்டார்ஸ். இந்நிறுவனம் புதிய ரியோ காரை, 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரின் பிளாட்பாரத்தில்தான், புதிய ரியோ காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ரியோ கார் இந்தியாவிலும் லான்ச் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020ம் ஆண்டின் ஏதேனும் ஒரு சமயத்தில்தான், புதிய கியா ரியோ கார் இந்தியாவில் லான்ச் ஆகும் என கூறப்படுகிறது.

ஹூண்டாயை காட்டிலும், கியா மோட்டார்ஸ் பிரீமியம் பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஹூண்டாய் ஐ20 காரை காட்டிலும், 50 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில்தான், புதிய கியா ரியோ கார் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 காருடன் மட்டுமல்லாது, மாருதி சுஸூகி பலினோ, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடனும், புதிய கியா ரியோ கார் போட்டியிடும். இந்த காரின் இந்திய வருகையை, இங்குள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டுள்ளனர்.

புதிய கியா ரியோ கார், ப்ளூடூத் உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பின்பகுதியில் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் கியா குறை வைத்து விடுமா என்ன? புதிய ரியோ காரில் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. டயர்களில் உள்ள ஏர் பிரஷரை கண்காணித்து கொண்டே இருக்கும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

ஏதேனும் ஒரு டயரில், ஏர் பிரஷர் குறைந்தால் கூட, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிரைவருக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் டயர்களில் சரியான ஏர் பிரஷரை, டிரைவரால் பராமரிக்க முடியும். இது விபத்துக்களை தவிர்க்க உதவி செய்கிறது.

இதுதவிர இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோலும், புதிய கியா ரியோ காரில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங் கண்ட்ரோலை டிரைவர் இழப்பதை இஎஸ்சி கண்டறிந்தால், பிரேக்குகளை தானாகவே அப்ளை செய்யும். இதன்மூலம் கார் சறுக்கி செல்லாமல், கட்டுப்பாட்டிற்குள் வரும்.

அத்துடன் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் வசதியும், புதிய கியா ரியோ காரில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் புதிய கியா ரியோ காரில், ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

சர்வதேச அளவில், புதிய கியா ரியோ காரில், 1.6 லிட்டர், இன்லைன், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6,300 ஆர்பிஎம்மில் 130 பிஎஸ் பவர் மற்றும் 4,850 ஆர்பிஎம்மில் 161 என்எம் டார்க் திறனை வழங்கும் வல்லமை வாய்ந்தது.

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான், இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ரியோ காரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. புதிய கியா ரியோ கார் குறித்த தகவல்கள் வெளியானதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு எழ தொடங்கி விட்டது.


Click it and Unblock the Notifications