அரசு பஸ்ஸை குரங்கு ஓட்டி சென்றதால் உயிரை கையில் பிடித்தபடி பயணித்த மக்கள்.. திக்.. திக்.. வீடியோ..
அரசு பேருந்து ஒன்றை குரங்கு ஓட்டி சென்றதால், பயணிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்தனர். அந்த வீடியோ வைரலானதால், சம்பந்தப்பட்ட பேருந்தின் டிரைவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசு பேருந்து ஒன்றை குரங்கு ஓட்டி சென்றதால், பயணிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்தனர். அதிர்ச்சிகரமான அந்த வீடியோ வைரலானதால், சம்பந்தப்பட்ட பேருந்தின் டிரைவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (Karnataka State Road Transport Corporation-KSRTC) சொந்தமான பேருந்து ஒன்று, தாவனகெரே மற்றும் பரமசாகரா இடையே பயணித்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது குரங்கு ஒன்றை ஸ்டியரிங் வீலின் (Steering Wheel) மீது அமர வைத்தபடியே, டிரைவர் பிரகாஷ் பேருந்தை ஓட்டி சென்றார். ஸ்டியரிங் வீலின் மீது அமர்ந்து கொண்டு சிறிய சிறிய சேட்டைகளை செய்து கொண்டே வந்த குரங்கை, டிரைவர் பிரகாஷ் அவ்வப்போது தடவி கொடுக்கவும் செய்தார்.

டிரைவர் பிரகாஷ் அசட்டு தைரியத்தில் செய்த விபரீதமான இந்த செயலை, சில பயணிகள் ஊக்குவித்தனர். அதே நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்த மற்ற பயணிகள் திக்..திக்.. மனநிலையில்தான் பயணித்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் கடந்த 1ம் தேதி நடைபெற்றுள்ளது.

பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் இதனை வீடியோவாக எடுத்தனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, கர்நாடக மாநில போக்குவரத்து துறை உயரதிகாரிகளையும் சென்றடைந்தது. அவர்கள் வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் கொஞ்சம் அசந்திருந்தால் கூட பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளின் உயிருக்கே பேராபத்தாக முடிந்திருக்கும். ஆனால் அதனை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல், அசட்டு துணிச்சலுடன் டிரைவர் பிரகாஷ் இந்த செயலை செய்திருந்தார்.

எனவே டிரைவர் பிரகாஷை அதிகாரிகள் வேலையில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கியுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''டிரைவர் பிரகாஷ் வேலையில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி, டிவிஷனல் பாதுகாப்பு ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை, டிரைவர் பிரகாசுக்கு எந்த வேலையும் வழங்கப்பட மாட்டாது. விசாரணை முடிவில் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன'' என்றார்.

இந்த சம்பவம் குறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், ''டிரைவர் பிரகாஷ் ஓட்டிச்சென்ற பேருந்தில், ஆசிரியர் ஒருவர் ரெகுலராக பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடன் இந்த குரங்கு எப்போதும் வரும். இந்த சூழலில் டிரைவர் பிரகாசுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

அதனால்தான் குரங்கை ஸ்டியரிங் வீலில் அமர வைத்தபடியே பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அதற்காக இந்த செயலை நிச்சயமாக நியாயப்படுத்த முடியாது. ஸ்டியரிங் வீலில் 2-3 நிமிடங்கள் வரை அந்த குரங்கு அமர்ந்திருந்தது. அதன்பின் அடுத்த ஸ்டாப்பில், பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டது.

பயணிகளிடம் இருந்து எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருந்தாலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் முடிவில் டிரைவர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்படலாம்'' என்றார்.

ஸ்டியரிங் வீல் மீது குரங்கை அமர வைத்து அரசு பேருந்தை டிரைவர் ஓட்டிச்சென்ற வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
விலங்குகளின் கையிலோ அல்லது முறையாக பயிற்சி பெறாத நபர்களின் கைகளிலோ எந்த ஒரு வாகனத்தின் ஸ்டியரிங் வீலையும் கொடுக்க கூடாது. இது விபத்துக்களுக்கு வழி வகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications