மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி மாடல்கள்: அதிகாரப்பூர்வ தகவல்!
புதிய எஸ்யூவி மாடல்களையும், மின்சார கார்களையும் உருவாக்குவதற்காக மஹிந்திரா நிறுவனமும், ஃபோர்டு நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன.
புதிய எஸ்யூவி மாடல்கள் மற்றும் மின்சார கார்களை உருவாக்குவதற்காக மஹிந்திரா மற்றும் ஃபோர்டு கார் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும், மின்சார கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் பல முன்னணி கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், எஸ்யூவி தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன.

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் அடிப்படையிலான புதிய மின்சார செடான் காரை அறிமுகம் செய்ய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளதாக இரு நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், இந்த கூட்டணியில் மின்சார கார் மாடல்கள் மட்டுமின்றி, புதிய எஸ்யூவி மாடல்களையும் தயாரிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.

நடுத்தர வகை மற்றும் சி செக்மென்ட் ரகத்திலான எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி உருவாக்க இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல்கள் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு என இரண்டு கார் நிறுவனங்களின் பிராண்டுகளிலும் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் எஞ்சின்கள் ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய கார் மாடல்களில் இடம்பெற இருக்கிறது. மேலும், இப்போது ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்து வரும் ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான ரகத்தில் இந்த கூட்டணி தயாரிக்கும் இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களும் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன.

குறிப்பாக, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய மாடல்களை குறிவைத்து இந்த இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களும் களமிறக்கப்படும். எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனத்தின் நிபுணவத்துவத்தை ஃபோர்டு நிறுவனம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, சர்வதேச அளவில் புதிய தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு ஃபோர்டு நிறுவனத்தின் ஒத்துழைப்பை மஹிந்திரா நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.

இவை தவிர்த்து, கார்களில் இடம்பெறும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மற்றும் பொழுதுபோக்கு, நேவிகேஷன் சாஃப்ட்வேர்களை தயாரிக்கவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நவீன கார் சாதனங்களை இந்த கூட்டணி உருவாக்க இருக்கிறது.

இந்த கூட்டணியின் புதிய மாடல்கள் அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் மூலமாக இரு நிறுவனங்களுமே அதிக பயன் பெறும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








