புதிய கார்களின் அறிமுகத்தை நிறுத்தபோகிறது மஹிந்திரா...!
மஹிந்திரா நிறுவனம் அடுத்த 8 மாதங்களில் 3 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின் ஒரு ஆண்டிற்கு எந்த வித புதிய மாடல் காரையும் அறிமுகப்படுத்தப்போவதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் அடுத்த 8 மாதங்களில் 3 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின் ஒரு ஆண்டிற்கு எந்த வித புதிய மாடல் காரையும் அறிமுகப்படுத்தப்போவதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிஎஸ் 6 புகை உமிழ்வு கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

இந்தியா தற்போது பிஎஸ்4 என்ற புகை உமிழ்வு கட்டுப்பாட்டு விதியை பின்பற்றி வருகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவை இந்த விதிகள் தான் கட்டுப்படுத்துகிறது. இந்த விதிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலும் கடுமையாக விதிகளாக மாறி ஒவ்வொரு நிலையாக முன்னேறி மாசு அளவை கட்டுப்படுத்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பிஎஸ் 3 இல் இருந்து பிஎஸ் 4 கட்டுபாட்டிற்கு வாகனங்கள் வந்த போது பிஎஸ்3 வாகனங்கள் எல்லாம் குறைந்த விலைக்கு விற்பனையானது. இது குறித்து நீங்கள் நினைவு வைத்திருப்பீர்கள்.

தற்போது இந்தியாவில் காற்று மாசு அதிகமாகி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த முடிவு செய்த அரசு பிஎஸ் 5 கட்டுப்பாட்டை விட்டு விட்டு நேரடியாக பிஎஸ் 6 கட்டுபாடை வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

பிஎஸ்6 புகை உமிழ்வு கட்டுபாடு என்பது கடுமையான விதிகளுக்குள் வருவதால் அதற்கு தகுந்த இன்ஜின்களை தயாரிக்கும் பணியை இப்பொழுதே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் துவங்கி விட்டன.

சில நிறுவனங்கள் டீசல் இன்ஜினில் பிஎஸ் 6 கட்டுபாட்டின் படி இன்ஜின் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதாலும் அதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதாலும் டீசல் காரின் தயாரிப்பையே விட்டுவிட்டனர்.

மஹிந்திரா நிறுவனத்தை பொருத்தவரை அந்நிறுவனம் தயாரித்த கார்களில் டீசல் இன்ஜின் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது. அதனால் அந்நிறுவனம் டீசல் இன்ஜினை கைவிட முடியாத நிலையில் உள்ளது. மற்ற சில நிறுவனங்களை போல மஹிந்திரா நிறுவனமும் டீசல் இன்ஜினை கைவிட்டால் அந்நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு சரியும் என அந்நிறுவனம் கருதுகிறது.

இதனால் அந்நிறுவனம் வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தங்கள் நிறுவனம் தற்போது வெளியிடுவதற்காக தயாரித்து வரும் கார்களை வெளியிட்டுவிட்டு அதன் பின் 1 ஆண்டிற்கு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதை ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளது.

அதன் படி 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அந்நிறுவனம் எந்த புதிய கார்களையும் அறிமுகப்படுத்தப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. அந்த காலகட்டத்தில் பிஎஸ்6 புகை உமிழ்வு கட்டுபாட்டுடன் டீசல் இன்ஜினை மிக நேர்த்தியாக தயாரித்து அதை கொண்டு புதிய கார்களை உருவாக்கி அதை 2020ம் ஆண்டு ஏப்ரல்மாதத்திற்கு பின் விற்பனைக்கு அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2019ம் ஆண்டிற்குள் மஹிந்திரா நிறுவனம் 3 புதிய மாடல்கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாராஸ்ஸோ என்ற காரின் பெயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் அக். மாதம் விற்பனைக்கு வருகிறது. இது எம்பிவி ரக காராகும். சைலோ காருக்கு நிகராக இந்த கார் இருக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

அதே போல எக்ஸ்யூவி 700 என்ற சொகுசு எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டுவருகிறது. எஸ் 201 என்ற கோட் எண் கொண்ட 4 மீட்டருக்கு குறைவான காம்பெக்ட் எஸ்யூவி காரை 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

2019ம் ஆண்டு முழுவதும் இந்த கார்களின் விற்பனையை மட்டுமே அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் பின் மஹிந்திரா நிறுவனம் அறிவிக்கும் புதிய கார்கள் பிஎஸ்6 புகை உமிழ்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவை மற்ற நிறுவனங்களும் விரைவில் எடுக்கும் என மற்ற ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2019ம் ஆண்டில் புதிய வாகனங்களின் அறிமுகம் குறைவாகதான் இருக்கும்.

அதே நேரத்தில் இந்த கார்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மற்ற காலங்களில் உள்ள விற்பனையை விட இந்த காலகட்டத்தில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








