வெறும் 2 லட்ச ரூபாய்க்குள் புதிய டிராக்டர்.. சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் இந்திய நிறுவனம்..
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், வெறும் 2 லட்ச ரூபாய்க்குள், புதிய டிராக்டர் ஒன்றை அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், வெறும் 2 லட்ச ரூபாய்க்குள், புதிய டிராக்டர் ஒன்றை அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா அண்டு மஹிந்திரா (Mahindra & Mahindra). கார், இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி டிராக்டர்கள் உற்பத்தியிலும் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்திய டிராக்டர் சந்தையின் தலைவன் என்றால், அது மஹிந்திராதான். அதே சமயம் இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்பட 40 நாடுகளில் மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது புதிய டிராக்டர் ஒன்றை உருவாக்கும் பணிகளில், மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் விலை வெறும் 2 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும். எனவே சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இது மிகுந்த பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள 90 சதவீத சிறு மற்றும் குறு விவசாயிகள், மேன்யூவலான விவசாய முறைகளையே கடைபிடித்து வருகின்றனர். எனவே பணியாளர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால், விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாய் குறைகிறது.

ஆனால் வெறும் 2 லட்ச ரூபாய்க்குள் புதிய டிராக்டர் கிடைப்பதன் மூலம், இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத்திற்கு அவர்கள் மாற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத்தின் முக்கிய காரணியே டிராக்டர்தான்.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கூறுகையில், ''விலை உயர்ந்த டிராக்டர்களை வாங்க முடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவேதான் 2 லட்ச ரூபாய்க்குள் நல்ல டிராக்டரை வழங்க முயற்சி செய்கிறோம்'' என்றார்.

தற்போதைய நிலையில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் மேற்பட்ட நிலங்களை வைத்துள்ள விவசாயிகளை குறி வைத்தே, டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 2 லட்ச ரூபாய்க்குள் டிராக்டரை அறிமுகம் செய்வதன் மூலம், 2-5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளை கவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பவன் கோயங்கா கூறுகையில், ''சொந்தமாக டிராக்டர் வாங்க முடியாத நிலையில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு இது மிகவும் பலன் அளிக்கும். அவர்கள் அதிக அளவிலான பணம் சம்பாதிக்க உதவ வேண்டும் என்பதும் எங்களின் நோக்கங்களில் ஒன்று'' என்றார்.

மஹிந்திரா நிறுவனம் டிராக்டர்களை உற்பத்தி செய்ய தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 21 லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இன்றைய நிலையில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2 லட்சம் டிராக்டர்களை, மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications