புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!
ஒருவழியாக புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.
ஒருவழியாக புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழு விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் அடிப்படையில் 9 சீட்டர் மாடலாக கூடுதல் நீளத்துடன் மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் P4, P6 மற்றும் P8 ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த புதிய காரில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா டியூவி300 தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. குறிப்பாக, முன்பக்க வடிவமைப்பு அப்படியே தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கூடுதல் நீளத்துடன் டி பில்லர் சேர்க்கப்பட்டு இருப்பதுடன், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் முக்கிய மாற்றமாக இருக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் இன்டீரியரை இத்தாலியை சேர்ந்த ஃபினின்ஃபரீனா நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோவில் வடிவமைக்கப்பட்டதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த காரில் ஃபாக்ஸ் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 17.8 செமீ அளவுடைய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற்றுள்ளது. 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி, புளூசென்ஸ் மொபைல் அப்ளிகேஷன், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற வசதிகளையும் இந்த தொடுதிரை சாதனம் சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், திடீரென பிரேக் பிடிக்கும்போது தானாக ஒளிர்ந்து எச்சரிக்கை செய்யும் ஹசார்டு இண்டிகேட்டர் விளக்்குகள் போன்றவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் மெஜெஸ்டிக் சில்வர், க்ளேசியர் ஒயிட், போல்டு பிளாக், டைனமோ ரெட் மற்றும் மோல்டென் ஆரஞ்ச் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் ரூ.9.47 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மூன்றாம் நிலை நகரங்கள், கிராமங்கள் மற்றும் வாடகை கார் நிறுவனங்களை இலக்காக வைத்து இந்த புதிய மாடலை மஹிந்திரா களமிறக்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








