புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் வருகை விபரம் வெளியானது!
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் கால அளவு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியானது மஹிந்திரா அரங்கில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த எஸ்யூவியானது இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மேலும், ரெக்ஸ்டன் எஸ்யூவியை எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர அறிமுகம் செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியானது கடந்த சில மாதங்களாக தீவிர சாலை சோதனை ஓட்டங்களில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, அக்டோபருக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று உறுதியாக தெரிகிறது.

இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவியில் யூரோ-6 மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணயம் கொண்ட 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 181 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

வழக்கம்போல் உட்புறத்தில் அதிக தொழில்நுட்ப வசதிகளை வழங்கி வாடிக்கையாளர்களை வசீகரிக்க இருக்கிறது. 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டாவது இருக்கை பயணிகளுக்கான 10.1 அங்குல டிவி திரைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகிய வசதிகளை பெற்றிருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியானது போட்டியாளர்களைவிட வீல் பேஸ் நீளம் என்பதால், இந்த 7 சீட்டர் எஸ்யூவி உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கைகளிலும் மிக தாராள இடவசதியையும் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எமெர்ஜென்சி பிரேக் சிஸ்டம், ஆன்ட்டி ரோல் ஓவர் புரொடெக்ஷன், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

பழைய சாங்யாங் ரெக்ஸ்டன் காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய மாடலாக வர இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடலை மஹிந்திரா களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








