OLX மூலம் கார் வாங்க வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் அபேஸ்... உஷார் மக்களே!!
ஓஎல்எக்ஸ் தளத்தின் மூலமாக கார் வாங்க வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூரை சேர்ந்த நயாஸ் என்பவரிடம் இன்னோவா காரை விற்பதாக கூறி ரூ.
ஓஎல்எக்ஸ் தளத்தின் மூலமாக கார் வாங்க வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பழைய கார்களை ஆன்லைனில் வாங்குவதால் தரகு கொடுக்கும் அவசியமில்லாமல் போகிறது. உரிமையாளர்களிடம் நேரடியாக வாங்குவதன் மூலமாக காரை சரியான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால், ஓஎல்எக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் பழைய கார்களை வாங்குவதும், விற்பதும் அதிகரித்து வருகிறது.

எனினும், ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும்போது எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த நயாஸ் அகமது(38) என்பவர் இன்னோவா காரை வாங்க முடிவு செய்துள்ளார்.

ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு உள்ள கார்கள் குறித்து அலசி இருக்கிறார். அப்போது சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தத சபீர் அகமது என்பவர் நல்ல கண்டிஷனில் உள்ள தனது டொயோட்டா இன்னோவா காரை விற்பனை செய்வதற்காக விளம்பரம் கொடுத்திருந்ததை கண்டிருக்கிறார்.

அந்த தளத்தில் கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சபீர் அகமதுவிடம் பேசி இருக்கிறார். அப்போது காரை நேரில் பார்க்க வருமாறும், கார் பிடித்திருந்தால் ரூ.1.5 லட்சம் முன்பணம் தருமாறும் நயாஸ் அகமதுவிடம் சபீர் கூறி இருக்கிறார்.

இதனையடுத்து, ரூ.1.5 லட்சம் முன்பணத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் நயாஸ். சொன்ன இடத்தில் சபீர் காருடன் காத்திருந்தார். காரை ஓட்டிப்பார்த்த நயாஸுக்கு அந்த இன்னோவா கார் பிடித்துப் போய்விட்டது. ரூ.12 லட்சம் காருக்கு விலை பேசப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே பேசியபடி, ரூ.1.5 லட்சம் முன்பணத்தை கொடுத்துள்ளார் நயாஸ்.

அப்போது காரில் சிறிய பிரச்னைகள் இருப்பதாகவும், அதனை தானே அருகிலுள்ள தனது நண்பரின் மெக்கானிக் ஷெட்டில் சரிசெய்து தருவதாகவும் கூறி சபீர் அகமது காருடன் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சபீர் அகமது திரும்பி வரவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை நயாஸ் உணர்ந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நயாஸ் அகமது புகார் அளித்தார். புகாரை பதிவு செய்துள்ள காவல் துறையினர் ரூ.1.5 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான சபீரை தேடி வருகின்றனர். நயாஸ் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து சபீரை தேடும் பணி நடந்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைனில் எந்த பொருட்களை வாங்கினாலும் மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே, ஆன்லைனில் வாங்கும்போது நடந்த மோசடிகள் குறித்து பலமுறை செய்தி வெளியிட்டு இருக்கிறோம். எந்த அளவு உஷாராக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.

இந்தநிலையில், தற்போது நடந்துள்ள சம்பவமும் ஆன்லைனில் வாகனங்கள் வாங்கும்போது மிக கவனமாக செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே இருக்கிறது. டீல் முடிந்தவுடன் ரொக்க பணத்தை கொடுக்கும்போது அனைத்து தஸ்தாவேஜுகளையும் பெற்று சரிபார்த்த பின்னரே பணத்தை கொடுக்க வேண்டும்.

வங்கி பரிவர்த்தனைகள் மூலமாக காருக்குரிய தொகையை பரிமாற்றம் செய்வதும் நல்லது. இந்த காலத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் டீல் பேசுவதை தவிர்க்கவும்.

ஆன்லைனில் வாங்கும்போது கார் உரிமையாளர்களின் விபரத்தையும், விற்பவரின் விபரத்தையும் முதலில் சரிபார்க்கவும். திருட்டு வாகனங்களை கொண்டு வந்து தலையில் கட்டும் ஆபத்து இருக்கிறது. இதுபோன்ற பரிவர்த்தனைகளின்போது நண்பர்கள் அல்லது உறவினர்களையும் உடன் அழைத்து செல்வது நல்லது.

முன்பணம் கொடுப்பதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களையும், காரையும் பரிசோதித்து பார்த்துவிட்டு வாங்குவதும் அவசியம். சந்தேகம் இருப்பின், அந்த காரை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. விபத்தில் சிக்கிய காரைகூட ஆன்லைனில் எளிதாக தலையில் கட்டும் ஆபத்து இருக்கிறது.

ஆன்லைன் மூலமாக வாங்குவதில் பல அனுகூலங்கள் இருந்தாலும், அதனைவிட இதுபோன்ற மோசடிகள் நடப்பதற்கும் அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.


Click it and Unblock the Notifications








