மாருதி எர்டிகா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்!
புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது.
மாருதி எர்டிகா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் அண்மையில் இந்தோனேஷியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடல் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய கார் சாலை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட சில ஸ்பை படங்கள் இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில், புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுக்கு பதிலாக வரும் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேநேரத்தில், டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என்பது கனவாகவே இருக்கும். ஏனெனில், டீசல் எஞ்சின் மாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாருதி விரும்பவில்லை என தெரிகிறது. எனவே, தற்போது பயன்படுத்தப்படும் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் தொடரும் என்று தெரிகிறது.

மாருதி இக்னிஸ், ஸ்விஃப்ட் கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி எர்டிகா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்ட கட்டமைப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

முகப்பில் புதிய க்ரோம் க்ரில் அமைப்பு, முக்கோண வடிவிலான பனி விளக்குகள் அறை, பெரிய ஏர்டேம், புதிய பம்பர் அமைப்புகள் மற்றும் L வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

உட்புறத்தில் ஃபாக்ஸ் வுட் மர அலங்காரத் தகடுகள் பொருத்தப்பட்டு பிரிமியம் மாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ரூஃப் மவுண்ட் ரியர் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். புதிய அப்ஹோல்ட்ரியும் காருக்கு மதிப்பை கூட்டும்.

புதிய மாருதி எர்டிகா காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

புதிய மாருதி எர்டிகா கார் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மஹிந்திரா எம்பிவி காருடன் நேருக்கு நேர் போட்டி போடும். எனினும், எப்போதும் போல பட்ஜெட், நடைமுறை பயன்பாட்டு விஷயங்களில் எர்டிகா முன்னிலை பெறும்.
Source: MotorOctane


Click it and Unblock the Notifications