கிராஷ் டெஸ்ட்டில் அப்பளமாகிவிடுவோமோ... விடைபெறுகிறது மாருதி ஆல்ட்டோ 800!
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறையால் விற்பனையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சில முக்கிய கார் மாடல்களை இழக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறையால், மாருதி ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2019ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் இந்தியாவில் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதி அமலுக்கு வர இருக்கிறது. கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு இணையான பாதுகாப்பு தர அம்சங்கள் கொண்ட கார்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறையால் விற்பனையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சில முக்கிய கார் மாடல்களை இழக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே, ஓம்னி உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான மாருதி ஆல்ட்டோ 800 காரும் விலக்கப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி ஆல்ட்டோ 800 காரில் இருக்கும் 796சிசி எஞ்சினை புதிய பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக மாறுதல்கள் செய்ய வேண்டும். அப்படி மேம்படுத்துவது மிக கடினமான முறை என்பதுடன் தொழில்நுட்ப சவால்களும் உள்ளன. எனவே, இந்த திட்டத்தை மாருதி கைவிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்து, 800சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட கார்கள் 3.6 மீட்டர் நீளத்திற்கு மிகாமல் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதன்படி, வடிவமைத்தால் கிராஷ் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற இயலாத நிலை உள்ளது. இதனால், மாருதி ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வருவதை தவிர்த்து வேறு வழியில்லாத நிலை மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video


எனவே, அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் மாருதி ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தி முடிவுக்கு வர இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் மாருதி கார் நிறுவனத்தின் விற்பனையில் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

இந்தநிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி மற்றும் கிராஷ் டெஸ்ட்டிற்கு உகந்த வகையில் தனது பிற கார் மாடல்களை மேம்படுத்துவதில் மாருதி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் அறிமுகம் செய்யப்படும் மாருதி கார்கள் புதிய மாசு விதி மற்றும் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு இணையான தரத்தில் மாருதி அறிமுகம் செய்து வருகிறது.

புதிய மாருதி எஸ் க்ராஸ், சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, பெலினோ, டிசையர், ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் செலிரியோ ஆகிய கார்கள் புதிய பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வந்நதுள்ளன. முக்கிய மாடல்களை தக்க வைத்துக்கொண்டாலும், ஆல்ட்டோ 800 கார் நிறுத்தப்பட்டால் நிச்சயம் மாருதி வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications